Wednesday, December 19, 2007

கல்லூரி - எங்கே என் முத்து?

கல்லூரி திரைப்படம் பார்த்தவர்கள் கோகிலவாணி, காயத்ரி மற்றும் ஹேமலதா பற்றி நினைத்துப் பார்ப்பார்கள். எனக்கு என் நன்பன் முத்துகணேஷ் நினைவுக்கு வந்தான். தாயில்லா பிள்ளை, தோல் பதனிடும் சாலையிலும், நிலத்திலும் உழைத்து மகனை பள்ளிக்கு அனுப்பிய தந்தை, சிறு வயதிலேயே மணம் செயது கொடுக்கப்பட்ட தங்கை, அக்காவாவின் வயதேயுடைய பாசமுள்ள மாற்றான்தாய்.

படத்தில் வரும் முத்து என்ன ஆனானென்று தெரியவில்லை. என் முத்து எட்டாவது படிக்கும்போது வீட்டைவிட்டு ஓடிவிட்டான். அவனை பள்ளிக்கு மீட்டுவர நான் போதுமான அளவு முயற்சிக்கவில்லை என்று இப்போது வருந்துகிறேன்.

ஓ, விமர்சனமா? தமன்னா கபளீகரமாக (Gorgeous?!) இருக்கிறார். புதுமுகங்கள் நிறைவாகச் செய்திருக்கிறார்கள். காட்சிகள், பாத்திரங்களில் யதார்த்தம் மேலிடுகிறது. Shoutcastஇல் நான் ரசிக்கும் 'ஜுன் ஜுலை' பாட்டு இப்படத்தில்் இருப்பதைத் தெரிந்துகொண்டேன். 'நீங்க சொல்லுங்க ..., ஏன் ...' மாதிரி நகைச்சுவைகளை எப்படி ரசி(சகி)ப்பதென்று தெரியவில்லை. குருநாதரைப் போலவே பாலாஜி சக்திவேலிடமும் சரக்கு குறைவுதான் போலிருக்கிறது. படம்: பார்க்கலாம்.

Tuesday, December 18, 2007

தஸ் கஹானியான் - பதிற்றுப் பத்து!

ஊடகங்களில் விமர்சனம் எழுதுபவர்களைப் பிடித்து நல்லா நாலு சாத்து சாத்தனும்னு நினைக்கிறேன். தஸ் கஹானியான் (இந்தி - பத்து கதைகள்) என்று அருமையா படம் எடுத்திருக்காங்க. சில அல்லக்கைகள் இதைத் தாறுமாறாக விமர்சித்திருக்கின்றன. காட்டு: ராஜிவ் மசந்த் மற்றும் ஷுப்ரா குப்தா. இவங்களைப் படம் எடுத்து காட்டச் சொல்லனும்.

தஸ் கஹானியான் - அற்புதமான முயற்சி. பிரஞ்சில் வந்த Paris Je taime பற்றி முன்னமே எழுதியிருக்கிறேன். பொதுவா அழுகாச்சி படம் (Melodrama) எடுப்பவர்களால் பத்து நிமிடத்திலெல்லாம் கதை சொல்ல முடியாது. இங்கு ஆறு இயக்குனர்கள், பல நடிகர்கள், பின்னனிக் கலைஞர்கள் சேர்ந்து 10 பத்து நிமிடப் படம் எடுத்திருக்கிறார்கள்.

பத்தில் எட்டு பகுதிகள் நிறைவாகச் செய்யப் பட்டதாகவே நினைக்கிறேன். இதில் இரண்டு பகுதிகளில் தமிழும் இருக்கிறது! நானா பாடேகர் வரும் Gubbare என்னும் பகுதியும், நேகா தூபியா வரும் Strangers in the Night பகுதியும் என்னைக் கவர்ந்தன. நாயகன், சத்யா (இந்தி), பாட்ஷா போன்ற படங்களை பத்து நிமிடத்தில் அழகாக எடுக்க முடியுமென்று Rise and Fall இல் காட்டியிருக்கிறார்கள். பார்க்கத் தவறாதீர்கள்.

டான் மாதிரி டப்பாவை எல்லாம் இரண்டு தடவை காப்பியடிக்கும் நம்மவர்கள், இந்த மாதிரி நல்ல முயற்சிகளையும் காப்பி அடிக்கலாமே?

Monday, December 17, 2007

சென்னைத் திரைப்பட விழா

ஐந்தாவது சென்னைத் திரைப்பட விழா தற்போது நடந்துவருகிறது. சென்னைவாசிகள் கொடுத்து வைத்தவர்கள்! இங்கு திரையிடப்படும் தமிழல்லாத படங்களில் The Lives of others என்னும் ஜெர்மானிய படத்தை மட்டுமே நான் பார்த்திருக்கிறேன். அடூரின் நாலு பெண்கள் பார்க்க ஆர்வம்.

இந்திய திரைப்பட ரசிகர்கள் சங்கம் என்னும் அமைப்பு இந்த திரைப்பட விழாவை நடத்துகிறது. பாராட்டுக்கள். இவர்கள் ஆண்டு முழுவதும் பல நல்ல படங்களை திரையிடுவது தெரிகிறது. கலக்குங்க!

அடுத்த மாதம் சென்னையிலும் குவஹாத்தியிலும் நடக்கவிருக்கும் குறும்பட விழாவிற்கும் எனது வாழ்த்துக்கள்.

இந்தியத் திரைப்பட விழாக்களின் பட்டியல் கீழே. இவை நடக்கும்போது நீங்கள் அந்த ஊரிலிருந்தால் போய்ப் பாருங்களேன்!

1. சர்வதேச இந்தியத் திரைப்பட விழா, கோவா.
2. அரசின் திரைப்படச் சரகம் நடத்தும் மும்பை திரைப்பட விழா.
3. திருவணந்தபுரத்தில் நடக்கும் கேரள திரைப்பட விழா.
4. அரசின் சிறார் திரைப்படக் கழகம் நடத்தும் குழந்தைகள் திரைப்பட விழா.
5. கொல்கத்தா திரைப்பட விழா.
6. சென்னைத் திரைப்பட விழா.
7. தில்லியில் நடக்கும் ஆசிய/அரபு திரைப்பட விழா.
8. ஐதராபாத் திரைப்பட விழா.
9. பூரியில் நடக்கும் சுவாரசியமான சுதந்திரத் திரைப்பட விழா.
10. திருச்சுரில் நடக்கும் குறும்பட விழா.
11. புணே சர்வதேச திரைப்ப்ட விழா.
12. பெங்களூரில் நடக்கும் தண்ணீர் திரைப்பட விழா!

Tuesday, December 11, 2007

ஜெயிக்கப் போவது யாரு?

ரவி கிளப்பிவிட்ட வோர்ட்விரஸ் புயல் நன்றாக அடித்துக்கொண்டு இருப்பது தெரிகிறது. இத்தாலி, பிரஞ்சு, இந்தோனேசியா, சப்பானிய மொழிகளோடு போட்டி போட்டுக்கொண்டு வோர்ட்பிரஸ் தமிழாக்க முயற்சி நடக்கிறது. இறுதிக்கோட்டை யார் முதலில் பிடிக்கப் போகிறார்கள்?

ரவி கொடுத்திருந்த வழிகாட்டி உதவியாயிருக்கிறது. அனைத்து வார்த்தைகளையும் மொழிபெயர்த்த பின்பும், அவற்றின் 'இடம் பொருள் ஏவல்' சரிபார்க்க ஆட்கள் தேவைப்படுவார்கள். எ.கா: Hawt Post ஐ எப்படி சுவையாக மொழிபெயர்ப்பது? ஒரு கைகொடுக்க வாங்க.

இந்த மடர்குழுமத்தில் மேலும் விவரங்கள் கிடைக்கும்.

Monday, December 10, 2007

பருத்திவீரன், முத்தழகன்?

என்னப்பு பாக்கறீங்க? எப்பவவோ வந்த படத்தைப் பத்தி இப்ப எழுதறானேன்னு தானே? அட இப்பதானுங்கள நாங்க இதப் பாத்தோம்!

சரி, சரி, அந்த கிராமத்தின் பேச்சுநடை எனக்கு வரப்போவதில்லை! பருத்திவீரன் சிறந்த படைப்பு என்பதில் சந்தேகமில்லை. சாதாரணமாக நல்ல கதை, கருத்து இருந்தும் படத்தை மோசமாக எடுப்பதுதான் இத்தகைய கதையம்சமுள்ள படங்களில் வழக்கம். சேரனின் இயலாமை, தங்கர் பச்சானின் அபத்தக் களஞ்சியங்கள், பார்த்திபனின் நாடகங்கள் என்று நாம் அறிந்ததுதானே! அமீர் இயக்கிய ராம் திரைப்படம்கூட எழெட்டு முடிவுகள் (climax) வைத்து சொதப்பிய படம்தான்.

அவற்றோடு ஒப்பிடும்போது பருத்திவீரன் மிகவும் பாராட்டப்பட வேண்டிய படம். பல நிமிடங்கள் வருகிற திருவிழா தொடக்கக் காட்சியாக வருவது அருமை. எங்கள் ஊருக்கு அருகில் நடக்கும் கிராமத் திருவிழாக்கள் நினைவுக்கு வந்தன! நல்ல நகைச்சுவை, சிறப்பான நடிப்பு, பாத்திரத்துக்கு ஏற்ற நடிகர் தேர்வு, காட்சியமைப்பு என்று படம் எடுத்தவிதத்தில் கலக்கியிருக்கிறார்கள்.

ஆனாலும் இந்தப் படம் சொல்லவருகிற அல்லது சொல்லாமல் விட்டுவிடுகிற கருத்தில் எனக்கு உடன்பாடில்லை! Fatalism (விதிவசம்) நல்ல வேளையாக இந்தப்படத்தின் கரு இல்லை என்று நினைக்கிறேன். 'முற்பகல் செய்யின் பிற்பகல் (சுற்றத்தார்க்கும்!) விளையும்' என்பது ஓரளவு பொருந்துகிறது. ஆனால் முத்தழகுக்கு நேரும் கதியை என்னால் சீரணிக்க முடியவில்லை!

நந்தா என்கிற படத்தை விகடன் விமர்சித்தபோது, "சோகத்தை சனங்கள் ரசிப்பார்கள், படுசோகத்தை?" என்று கேட்டது நினைவிருக்கிறது. அதேபோல் இந்தப் படத்தில் ரசிகர்களை வேதனைக்கு உள்ளாக்கும் முயற்சி எனக்குப் பிடிக்கவில்லை. ஆனால் நான் வேதனை அடைந்தேன் என்பது இயக்குனர் அமீரின் வெற்றி என்பதில் சந்தேகமில்லை. பாராட்டுக்கள்!

Sunday, December 02, 2007

பள்ளிக்கூடம் போகாமலே ...

இருக்கமுடியாது! படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு வெளியேறிய அல்லது பள்ளிக்கே போகாத சிறார்களை பள்ளிக்கு அழைத்துவர ஒரு உன்னதமான திட்டம் உருவாகியிருக்கிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பள்ளி செல்லா குழந்தைகளைக் கண்காணித்து, அவர்களின் பெற்றோருக்கு ஏற்பட்டுள்ள இன்னல்களை முடிந்தவரையில் போக்கி, அந்தக் குழந்தைகளை மீண்டும் பள்ளிக்கு அழைத்துவர முயன்று வருகிறார்கள்.

அதுவும் தொழில்நுட்ப உதவியுடன். back2school.in என்னும் இணையதளத்தின் மூலம் அந்தச் சிறார்களை கண்காணிக்கிறார்கள். கலக்கல்! மத்திய அரசின் சர்வ சிக்ஷா அபியான் திட்டத்தின் கீழ், தமிழக அரசு உதவியுடன் இந்தத் திட்டத்தை செவ்வனே செய்துவரும் மாவட்ட ஆட்சியர் சந்தோஷ் பாபு, தன்னார்வளர்கள், பள்ளி ஆசிரியர்கள், இந்தத் தளத்தை உருவாக்கிய ஆர்பிடர் இன்போடெக் ஆகியோர் பாராட்டுக்கு உரியவர்கள்.

இது பற்றிய பத்திரிக்கை செய்திகள் இங்கே மற்றும் இங்கே. நான் ஏற்கனவே எழுதியிருந்த படிக்கும் இனிக்கும் இயக்கமும் இத்திட்டத்தோடு ஒன்றிணைந்ததுதான்.

Saturday, December 01, 2007

ஜுஜுபி!



சூப்பர் மச்சி! மேலும் விவரங்கள் இங்கே.

Friday, November 30, 2007

பிங்க்குதான் எனக்கு புடிச்ச கலரு ?!!!


இந்திய மட்டைப்பந்துக் கழகம் ஆரம்பிக்கப்பட்டு முதலாவது போட்டிகள் தொடங்கியிருக்கின்றன. கலக்குங்க! ஆனா போயும் போயும் பிங்க் நிறமா சென்னை சூப்பர்ஸ்டார்கள் அணிக்கு கிடைக்கனும்? கொஞ்சம் அசிங்கமா இருக்கு!

சூப்பர்ஸ்டார்கள் என்ற பெயரே சரியில்லைதான். 'சென்னைக் காளைகள்' என்று வைத்திருக்கலாம்! (சிகாகோ புள்ஸ் மாதிரி சென்னை புள்ஸ்?!) PHLஇல் விளையாடும் ஹாக்கி அணிக்கு சென்னை வீரர்கள் என்று நன்றாகப் பெயர் வைத்திருக்கிறார்கள்.

அதே மாதிரி விஜய் மல்லையா இன்னொருவருடன் சேர்ந்து வாங்கிவிட்டார் என்பதாலேயே Spkyer என்ற Formula 1 அணிக்கு Force India (Farce India?!) என்று அசிங்கமாகப் பெயர் வைத்திருக்கிறார்கள். Kingfisher பெயரையும் சேர்த்து 'King Spyker' என்று வைத்திருக்கலாம்.

F1 இல் இருக்கும் அணிகளுக்கு காரைத் தயாரித்தவர், அணியின் முதலாளி நிறுவனம் இரண்டையும் சேர்த்து பெயர் வைப்பது வழக்கம். (BMW Williams, Mclaren Mercedes) இந்தியர்கள்தான் Force India என்று சிறுபிள்ளைத் தனமாக யோசிப்பார்கள்! பாரதி படத்தில் "தேசப்பற்று கள்ளக்காதல் ஆகிட்டது ஓய்!" என்று சொல்லுவார். இப்போது இந்தியர்களின் தேசப்பற்று விரசமாகிவிட்டது! (Jingoism!)

அ-சமத்துவபுரம்?

திருந்தாத ஜென்மங்கள் இங்கே. அடுத்த தடவை ஐதராபாத்தில் குண்டு வெடிக்கும்போது இங்கு வெடித்தால் தேவலை. இந்த சனியன்களைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள இங்கே செல்லவும். (குண்டு வைக்கப் பயன்படுமில்ல!)

Thursday, November 29, 2007

இன்று மலேசியா, நாளை தமிழகம்?

மலேசியத் தமிழர்கள் இனரீதியிலான இடஒதுக்கீடு, பொருளாதாரப் பங்கீட்டுக் கொள்கைகளால் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள் என்ற விசயமே எனக்கு இப்போதுதான் தெரிந்தது. அதற்காக வருந்துகிறேன். அவர்களின் அறப்போராட்டம் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள். அவர்கள் சில கிறுக்கத்தனமான கோரிக்கைகளைக் கைவிடுவது அவர்களின் போராட்டத்திற்கு மேலும் வலுசேர்க்கும்.

நிற்க. பெரும்பான்மை மக்கள் காலம் கடந்து இடஒதுக்கீடு பெறுவது எப்படி தவறாக முடியும் என்பதை மலேசிய நிலைமை எடுத்துரைக்கிறது. பிற்காலத்தில் தமிழகத்திலும் இந்த மாதிரி நிலைமை வரலாம். இன்றைய நிலையில் தமிழக சாதிவாரி ஒதுக்கீட்டு அளவு நியாயமாகத்தான் இருக்கிறதென்று நினைக்கிறேன். ஆனால் தமிழரின் பொருளாதார நிலை மேம்படும்போது சிலர் தேவையில்லாமல் தண்டிக்கப்படும் நிலை ஏற்படலாம்.

இடஒதுக்கீடு மூலம் சமூக நீதியை நிலைநாட்டும் முயற்சியில் முன்னோடியாகத் திகழும் தமிழகம், சாதிவாரி இடஒதுக்கீடு இனி தேவையில்லை என்று நிர்ணயிக்கும் முடிவை சரியான தருணத்தில் எடுக்கும் என்று நம்புகிறேன். முதல் காரியமாக தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களில் தேவையானவர்களுக்கு பயன்கள் போய்ச் சேருகிறதா, இல்லை அவர்கள் இடுக்கில் விழுந்துவிட்டார்களா என்று அறிய முயற்சிகள் எடுக்கவேண்டும்.

Wednesday, November 28, 2007

எட்டப்பா!

தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்டதும், கன்னடத்திற்கு அந்த 'அந்தஸ்து' இன்னும் வழங்கப்படாததும், கன்னடர்களுக்கு மிகுந்த மனவருத்தம் தருவது நாம் அறிந்ததே. அது பற்றி இந்துவில் வந்த மற்றொரு செய்திக் கட்டுரையை சுருமுரியில் சுட்டி பேசிக்கொண்டிருந்தார்கள். இங்கே பார்க்கவும். நான் எட்டப்பனாகப் புகுந்து தமிழைக் காட்டிக்கொடுத்தேன்! அதை எனது ஆங்கிலப் பதிவிலும் இட்டுள்ளேன்!

கட்டபொம்மு பெயர் இருக்கும்வரை எட்டப்பன் பெயரும் இருக்குமாக்கும் ...

இந்தியாவின் கதை!



மேலும் விவரங்களுக்கு இங்கே! இந்த ஒளித்துண்டும், மற்ற பகுதிகளும் இங்கே.

தமிழகம் என்னும் மாயா உலகம்!


மைக்கேல் வுட் என்னும் வரலாற்று அறிஞர் சென்னையைப் பற்றி எழுதியதை நேற்று சுட்டியிருந்தேன். இன்று அவரின் மற்றொரு கட்டுரையைப் படித்தேன்.

கொல்லம் மெயிலேறி மதுரை, தஞ்சை, மாயவரம், குடந்தை, சிதம்பரம், புதுவை என்று அவர் அடுக்கிக்கொண்டே போக, என் மண்ணின் வாசம் வந்து நெஞ்சை முட்டுகிறது! ம்... இப்போதைக்கு கடந்த முறை தஞ்சை பெரிய கோவிலில் நான் எடுத்த படங்களைப் பார்த்து திருப்தியடைய வேண்டியதுதான்.

மைக்கேல் மாயா விஷன் மற்றும் பிபிசி 2 ஆகியோருக்காகச் செய்த 'இந்தியாவின் கதை' என்ற தொடருக்காகத்தான் மாயா உலகில் சுற்றியிருக்கிறார். கொடுத்து வைத்தவர்!

படம்: நன்றி மாயாவிஷன்.

Tuesday, November 27, 2007

இவர்களும் இந்தியர்கள்தான் ...

அஸ்ஸாம் மாநிலம் குவாஹாத்தியில் ஒரு ஆதிவாசிப் பெண்ணுக்கு நாகரிகம் தெரிந்த இந்தியர்கள் கொடுத்த 'தண்டனை', அவரது உடைகளைக் கலைந்து அவமானப் படுத்தியதுதான்! அந்தப் பெண் உள்ளிட்ட பல ஆதிவாசிகள் தங்களை பழங்குடியினராக (Scheduled Tribe) அறிவிக்கக்கோரி வன்முறையுடன் போராடினார்களாம். அதற்காக இந்த பதிலடி. இது நடந்தபோது சுற்றி நின்று படம்பிடித்த இளைஞர்கள்தான் நாளைய இந்தியாவை உருவாக்கப் போகிறார்கள். உருப்பட்ட மாதிரிதான்.

Monday, November 26, 2007

உம்மாச்சி கண்னைக் குத்தும்!

மைக்கேல் வுட் என்பவர் சென்னை (இல்லை மெட்ராஸ்) பற்றி எழுதிய இந்த அறிமுகக் கட்டுரை புன்னகைக்க வைத்தது. "buxom goddesses with Bollywood starlet eyes - utterly irresistible." இது நம்ம ஊர் பெண் கடவுளர் பற்றிய அவரது டேக்! குஷ்பு கோயிலுக்கு போயிருந்தாரோ?

பொல்லாதவன், ஆமாம்!

அப்பாடா! கடைசியா ஒரு நல்ல தமிழ் படம் பார்த்தாச்சு. 'பொல்லாதவன்' - கலக்கிட்டீங்க வெற்றிமாறன்! தமிழ் சினிமா முன்னேறிட்டு வருது என்று பலரும் சொல்லும்போது, நிஜமா? என்று தோன்றும்.

கடந்த இரண்டு வருடங்களில் நான் பார்த்த தமிழ்ப்படம் 6-7 தான் (?!) இருக்கும். 'சிவாஜி', 'வேட்டையாடு' - கேவலம். 'மொழி', 'வெயில்', 'பச்சைக்கிளி' - சுமார். 'இம்சை', 'பட்டியல்' - நன்று! மற்றபடி ஊடகங்களிலும், பதிவுகளிலும் பேசப்பட்ட படங்கள் பலவற்றை நான் பார்க்கவில்லை.

கூகுள் வீடியோவில் பார்த்தாலும் திருட்டுதானே என்கிற வருத்தத்தோடுதான் 'பொல்லாதவன்' பார்த்தேன். நல்ல நகைச்சுவை, கச்சிதமான பாத்திரங்கள், பிசிரில்லாத நடிப்பு, வசனங்கள், நம்பும்படியான காட்சிகள். இவற்றிற்காகவே இந்தப்படத்தைப் பாராட்டலாம்.

ஆனால் அதற்கும் மேலாக விருவிருப்பான திரைக்கதை, நாயகன், வில்லன் இருவர் பார்வையிலும் வர்ணனை மாறும் உத்தி, செல்வம், அவுட் மாதிரியான பாத்திரங்களையே நமக்குப் பிடித்துவிடும்படியான காட்சிகள், நாயகன் தங்கச்சியை வில்லன் கடத்துவான் என்று நினைக்கும் நம்மை கேலிசெய்யும் இயக்கம்!, ஒரு அடியாளை 'அடிச்சுடு பிரபு' என்று நாயகி சொல்லும் ஹைக்கூ! கலக்கியிருக்கிறார்கள்!

பாடல்கள் எல்லாமே தேவையில்லாதவை. அதுவும் வில்லன்கள் ஆடும் ஒரு குத்துப்பாட்டு திருஷ்டிப் பொட்டு. மற்றபடி நான் மிகவும் ரசித்த படம்.

Saturday, November 24, 2007

கன்ட்ரோல் - இல்லை!


மசாலான்னா இது மசாலா! கன்ட்ரோல் (Kontroll) என்ற ஹங்கேரியப் படம் பார்த்தேன். படம் முழுக்க புடபெஸ்ட் மெட்ரோவில் நடக்கிறது. அதாவது முழுக்கத் தரைக்கடியில். படம் துவங்கும்போது புடபெஸ்ட் இரயில்வே நிறுவனத்தைச் சேர்ந்த ஒருவர், இந்தப் படத்தில் காட்டப்படுவதுபோல் இங்கு ஒன்றும் நடப்பதில்லை என்று சொல்வதே ஹைக்கூ!

பயணச்சீட்டு சோதனையாளரான நமது நாயகன் Bulcsu, அவனது கிராதக சக ஊழியர்கள், அமீர்கான்-அர்ஜுன் மாதிரியான ரயிலுடன் ஓடும் சாகஸம், அழகான கரடியாக வரும் நாயகி!, நகைச்சுவை, ரயிலுக்கடியில் சிதறும் 'குதிப்போர்கள்', ஒரு முகமூடி அணிந்த மர்ம மனிதன் (இல்லை 'அது') என்ற இந்த காக்டெயில் கதை, ஹங்கேரியில் பெரும் வெற்றிபெற்றதில் வியப்பில்லை.

Nimrod Antal இன் படம். மசாலாக் கதையில் பல வாழ்வியல் உண்மைகள் பொதிந்துள்ளதாக விமர்சகர்கள் தெரிவிக்கிறார்கள்! பார்க்கலாம்!

Thursday, November 22, 2007

படம் போடுங்க அண்ணாச்சி!

இன்று அலுவலகத்திலிருந்து திரும்பி வரும்போது தோன்றியது. சென்னை உள்ளிட்ட மாநகரப் பேருந்துகளில் பயணத் தொலைக்காட்சி வைத்து விளம்பரம் செய்யலாமே? (ஏற்கனவே செய்றாங்களா?)

தொலைக்காட்சி நிறுவனங்களை ஏலத்துக்கு அழைத்து, எல்லாப் பேருந்துகளிலும் விளம்பரத் தொலைக்காட்சி வைக்கச்சொன்னால் அரசுக்குப் பணம் கிடைக்குமில்ல? அந்தப் பணத்தில் இன்னும் நிறைய பேருந்து விட்டால் புண்ணியமாப் போகும்.

Wednesday, November 21, 2007

பானை ஒறி!

ஆமாம். பானை ஒறி! 'கயிற்றில் தொங்கும் பானை' என்று பொருள்தரும் இந்த வார்த்தைகள் எழுதிய பானைத் துகடு ஒன்று கிடைத்திருக்கிறது. அதுவும் எகிப்து நாட்டின் குசேர்-அல்-காதிம் என்ற இடத்தில் கிடைத்திருக்கிறது. இது கி.மு. முதலாம் நூற்றாண்டில் செய்யப்பட்டிருக்கலாம் என்கிறார்கள்.

அதற்கென்ன இப்ப என்கிறீர்களா? இதுக்கு முன்னாடி இதே இடத்தில் கிடைத்த பானை 200 வருடம் பிந்தையது. பண்டைய காலத்தில் இந்தியாவுக்கும் உரோம சாம்ராஜ்யத்துக்கும் இருந்த வியாபார உறவுகளைப் பற்றி மேலும் அறிந்துகொள்ள இந்தக் கண்டுபிடிப்பு உதவப்போகிறது.

அதைவிட முக்கியமா தமிழ் பிராமி எழுத்து பற்றிய ஆராய்ச்சிக்கும் இது உதவும். இந்தியாவில் தமிழ்-பிராமி எழுத்து கி.மு. 500 வாக்கிலிருந்து கிடைத்திருக்கிறது. தமிழ் பிராமி எழுத்து, ஏன் பிராக்ரிதம் எழுதப்பட்ட அசோக பிராமி எழுத்தே இந்து சமவெளி (ஹரப்பா) எழுத்திலிருந்து வந்ததென்று ஐராவதம் மகாதேவன் உள்ளிட்ட சில ஆய்வாளர்கள் சொல்லிவருகிறார்கள். மத்தவங்க பிராமி அராமியாகிலிருந்து வந்ததுன்னு சொல்றாங்க. என்ன ஆகுதுன்னு பார்க்கனும்!

இந்து சமவெளி எழுத்துக்களை இன்னும் ஆய்வாளர்களால் படிக்கமுடியவில்லை என்பது இன்னொரு சங்கதி. ஐராவதம் மகாதேவன் அந்த எழுத்துக்கள் அரபு மொழி போல வலமிருந்து இடமாக எழுதப்பட்டதாகச் சொல்கிறார்! மேலும் அவர் ஆராய்ச்சிப்படி தொல்காப்பியம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டுக்கு முன்பு எழுதப்பட்டிருக்க வாய்ப்பில்லை!

Monday, November 19, 2007

சோனார் கெல்லா - தங்கக் கோட்டை

பல வருடங்களுக்குப் பிறகு சத்யஜித் ரேயின் படம் பார்த்தேன். சோனார் கெல்லா (வங்காள மொழி) என்று ஒரு சிறுவன் தனது பூர்வ ஜென்ம நிகழ்ச்சிகளை நினைவுகொள்வதாகச் செல்லும் ஒரு துப்பறியும் கதை. சிறந்த படமெல்லாமில்லை. ஆனால் பல நல்ல விசயங்கள் தெரியவந்தன. தமிழில் இது போன்று (சமீபத்தில்) ஏன் செய்யவில்லை என்று கேட்கத்தூண்டுபவை.

1. ரேயின் புகழ்பெற்ற பெலூடா, தோப்ஷே மற்றும் லால் மோகன் என்னும் பாத்திரங்கள் இப்படத்தில் இருக்கிறார்கள். பெலூ - துப்பறிவாளர், தோப்ஷே அவருக்கு உதவும் உறவுக்காரப் பையன், லால் மோகன் - ஜடாயு என்ற பெயரில் குழந்தைகளுக்கான கதைகள் எழுதுபவர். ரேயின் பல படங்களில் இந்த மூன்று பாத்திரங்களும் இடம்பெறுகிறார்கள்.

கேள்விகள்: தமிழில் ஏன் இத்தகைய பாத்திரங்கள் உருவாக்கப்படவில்லை? சாம்பு என்று அந்த காலத்தில் செய்திருந்தார்களே? ஆங்கிலத்தில் வவ்வால் மனிதன், சிலந்தி மனிதன், ஜேம்ஸ் பாண்ட், போர்ன் என்று பட்டை கிளப்புகிறார்களே? சுஜாதாவின் கணேஷ் வசந்தை வைத்து பல படங்கள் எடுத்திருக்கலாமே? ஒரே கதையை பல படங்களாக எடுத்த சங்கர் ஒரே நடிகர், பாத்திரத்தைப் பயன்படுத்தியிருக்கலாமே?

2. இந்தப்படமே ஒரு கோட்டையைப் பற்றியது என்பதால் இராஜஸ்தானிலுள்ள ஜெய்ப்பூர், ஜோத்பூர், ஜெய்சல்மேர் கோட்டைகளைக் காட்டுகிறார்கள். அவற்றின் வரலாறும் ஒரளவு தெரிகிறது.

கேள்வி: தமிழ் நாட்டிலுள்ள கோட்டைகளான சென்னை புனித ஜார்ஜ், வேலூர், செஞ்சி, தரங்கம்பாடி, தஞ்சை, மதுரை நாயக்கர் மகால், அறந்தாங்கி, பாஞ்சாலங் குறிச்சி, திண்டுக்கல், வட்டக்கோட்டை, உதயகிரி பற்றியயெல்லாம் தமிழர்களுக்கு, குறிப்பாக குழந்தைகளுக்கு எதாவது தெரியுமா?

3. இந்தப்படத்தை மேற்கு வங்காள அரசு தயாரித்திருக்கிறது.

இடி அமீன் கதையான The Last King of Scotland படத்தை ஐக்கிய ராச்சிய அரசு சேர்ந்து தயாரித்து இருந்தது! தமிழர் வரலாறு சம்பந்தப்பட்ட படைப்புகளை அரசே படமாக எடுக்கலாமே? பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம், இராவண காவியம் (?!), செஞ்சிக் கோட்டை பற்றிய கல்கியின் சிறுகதை போன்றவை உடனே நினைவுக்கு வருகின்றன.

பெரியார் படத்துக்கு அரசு பணம் கொடுத்ததென்று நினைக்கிறேன். ஆனால் அந்தப் படத்தை ஐந்து நிமிடங்கள்கூட என்னால் பார்க்கமுடியவில்லை. அவ்வளவு மட்டமாக பெரியார் படத்தை எடுத்திருக்கத் தேவையில்லை!

Saturday, November 17, 2007

சாவதற்கென்றே பிறந்தோம்...


சிதர் என்று பெயரிடப்பட்டள்ள புயல் பங்களாதேஷைத் தாக்கி ஆயிரத்துக்கும் அதிகமானோரை பலிகொண்டிருக்கிறது. 'வருங்கால வல்லரசான' இந்தியா ஆபத்திலிருப்போரைக் காப்பாற்றவும், மீட்புப் பணியிலும் விரைந்து இறங்கியிருக்கும் என்று நீங்கள் நினைத்தால், அதுதான் இல்லை!

இந்தியாவின் தமாசு பத்திரிக்கைகள் பற்றிச் சொல்லவா வேண்டும்? அவர்கள் பங்களாதேஷ் பற்றி தெரிவிக்கவோ, கவலை கொள்ளவோ இல்லை. இந்தியா தப்பித்ததை இரண்டு நாட்களுக்குக் கொண்டாடிவிட்டு, இராகுல் காந்திக்கு முடிசூடக் கிளம்பிவிட்டன! வெட்கம் கெட்டவர்கள்.

ஆனால் நல்லெண்ணம் கொண்டவர்கள் உலகில் இருக்கத்தான் செய்கிறார்கள். Scienceblogs என்னும் வலைப்பதிவில் கடந்த சில நாட்களாக புயல் அபாயம் குறித்தும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவது குறித்தும் எழுதிவருகிறார்கள்.

அபாயம் வருகிறதென்று நன்கு தெரிந்திருந்தும், அரசாங்கங்களும், ஊடகங்களும் மெத்தனமாக இருந்ததால், பலியான நூற்றுக் கணக்காணோர் சாவதற்கே பிறந்தனரோ? உயிர் பிழைத்தவர்களையாவது காப்பாற்றுவோம் வாருங்கள்.

Friday, November 16, 2007

பிப்ரவரியில் எத்தனை நாள்?

இந்தியாவில் அதுவும் நீங்கள் மோடியை வெறுக்கும் 'நல்ல' இந்தியராக இருந்தால் பிப்ரவரியில் 31 நாட்கள்! யோசாரின் சுட்டிக்காட்டும் "254 இந்துக்களை கொன்றது யார்?" என்ற தலைப்பில் அர்விந்த் லவாகரே கேட்கும் கேள்விகள் யோசிக்கவேண்டியவை.

மோடி குஜராத் சம்பவங்களுக்குகாக பகிரங்க மன்னிப்பு கேட்பது நலம் என்று நான் சமீபத்தில் எழுதிய ஆங்கிலப் பதிவு இங்கே.

Monday, November 12, 2007

புத்தம் சரணம்...

சிறு வயதிலிருந்தே எங்கள் ஊர் கோயிலில் சிதைக்கப்பட்ட சிற்பங்களைப் பார்த்துப் பழகியவன்தான். ஆனாலும் மேலுள்ள படம் வலிக்கிறது! பாகிஸ்தானின் ஸ்வாத் பகுதியில் சில மதவெறி பிடித்த வீணர்கள் இந்த ஏழாம் நூற்றாண்டு புத்தர் சிலையை சேதப்படுத்தியுள்ளார்கள். புத்தரின் சிந்தனைகள் அவர்களை ஆட்கொள்ளட்டும்! இவர்களைப் பார்த்துத் திருந்தட்டும்.

படம் நன்றி: நிதின் வழியாக இம்ரான்.

Friday, November 09, 2007

படிப்பும் இனிக்கும்!

அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

பேச்சுத்தமிழ் செத்துவருவது பற்றி ஏற்கனவே புலம்பியாகிவிட்டது. இப்போது முதலுக்கே மோசம் என்றபடி, பள்ளி மாணவர்களுக்கே தமிழில் எழுதப்படிக்கத் தெரியவில்லையாம்! கோவை மாவட்டப் பள்ளிகளில் நடத்தப்பட்ட ஆய்வில் இது தெரியவந்திருக்கிறது. இந்து பத்திரிக்கை செய்தி இங்கே.

நல்ல வேலையாக இந்த விவரங்கள் அதே பிரச்சனையை எதிர்கொள்ள தொடங்கப்பட்ட ஒரு தன்னார்வுத் திட்டத்தில்தான் தெரியவந்திருக்கிறது. Aid India அமைப்பு அரசு உதவியுடன் ஆரம்பித்திருக்கும் 'படிப்பும் இனிக்கும்' என்னும் குழந்தைகளுக்கு படிப்பை மகிழ்ச்சியான ஒரு அனுபவமாக மாற்றும் திட்டத்தில்தான் மேற்படி விசயம் தெரியவந்திருக்கிறது. இந்த திட்டம் வெற்றிபெறவும், தமிழகம் முழுவதும் இது விரிவடைந்து தமிழையும் குழந்தைகளையும் காப்பற்றவும் எனது வாழ்த்துக்கள்!

படிப்பை இலகுவாக்கும் ஜிகாம்பிரிஸ் முயற்சி பற்றிய என்னுடைய முந்தைய பதிவு இங்கே!

Monday, November 05, 2007

சூரியன் இன்னும் மிளிர்கிறது!

நிழலாக...

என்னை மிகவும் பாதித்த Sophie Scholl - Die letzten Tage என்னும் ஜெர்மானிய படத்தைப் பற்றி விலாவரியாக எழுதவேண்டும் என்று நினைத்திருந்தேன். பல வாரங்கள் உருண்டோடிவிட்டன. நாசிக்களை எதிர்த்து நின்ற ஒரு 21 வயது மாணவி சோபி ஸ்கோலின் உண்மைக்கதை. அவளும், அவளது சகோதரனின் நண்பர்களும் செய்த தியாகங்கள், என்னைப் போல் தினந்தோறும் திண்றுவிட்டுத் தூங்கிக்கொண்டிரும் உருப்படாத கேஸ்களுக்கு நல்ல பாடம்.

நிஜமாக...

அநியாயத்தை எதிர்த்துப் போராடாவிட்டால் நாம் மனிதராய்ப் பிறந்ததில் அர்த்தமேயில்லை என்பதை சோபி பொட்டில் அடித்தார்போல் சொல்கிறாள். இத்தனைக்கும் அவளும் அவளது நண்பர்களும் ஜெர்மானிய கிறிஸ்தவர்கள்தான். தனக்காக அன்றி பிறர்காக, இவ்வயகத்திற்காகப் போராடும் குணம் எல்லோர்க்கும் வாய்ப்பதில்லை. தான் தூக்கிலிடப்படுவதற்கு (இல்லை Guillotine) முன்னால் சோபி கடைசியாகச் சொன்னது - "சூரியன் இன்னும் மிளிர்கிறது!" (The Sun still shines!)

பி.கு: இப்படத்தின் நாயகி ஜூலியா ஜென்ட்ச் நடித்த The Edukators என்ற மற்றொரு ஜெர்மானிய படமும் பார்க்கவேண்டியதுதான்.

நாய் பிழைப்பு... அருமை!


Mitt liv som hund (My Life as a Dog) என்றொரு ஸ்வீடன் நாட்டு திரைப்படம் பார்த்தேன். அருமை! சொல்லவியலா குடும்பத் துயரத்தை ஒரு சிறுவனின் பார்வையில் செதுக்கியிருக்கிறார்கள். சிரித்து, சிந்தித்துக்கொண்டே பார்க்கலாம்.

இங்க்மார் (சிறுவன்) தன் வாழ்க்கையை துணுக்குச்செய்திகளோடு ஒப்பிட்டுக்கொள்வது கவிதை. "லைக்கா என்னும் நாய் தன்னை விண்வெளிக்கு அனுப்புமாறு கேட்டதா என்ன? மனித முன்னேற்றத்துக்காக (?!) லைக்காவை பட்டினி போட்டு சாகடித்தது உலகம்!" இக்கதையை கொடுத்த நாவல், அதன் ஆசிரியரின் சொந்தக்கதை என்பது சோகம்.

கட்டாயம் பார்க்கவேண்டிய படம். இப்படத்தின் இயக்குனர் Chocolat என்னும் 'சுவை'யான படத்தையும் கொடுத்தவர்.

Saturday, November 03, 2007

மனதை பாதித்த மரணம்

சொன்னால் நம்பமாட்டீர்கள். நேற்றிரவு விகடனில் இராசையா இளந்திரையனின் பேட்டி படித்தேன். பின்னர் அதுபற்றி மனதில் அசைபோட்டுக் கொண்டிருந்தபோது ஒரு பெயர் நினைவுக்கு வராமல் கொஞ்சம் மூலையைக் கசக்கிக்னேன். ஒரு கூகுள் தேடலில் கிடைத்திருக்கும். தூங்கிவிட்டேன்.

காலையில் எழுந்தவுடன் (இல்லை படுத்துக்கொண்டே) நான் செய்வது இணையத்தில் செய்தி படிப்பதுதான். முதல் செய்தியாக அதே பெயர். தமிழ்ச்செல்வன். மரணமடைந்திருந்தார்.

தவிர்க்கப்பட்டிருக்க வேண்டிய தாக்குதல். பிரபாகரன் கொல்லப்பட்டு தமிழ்ச்செல்வன் புலிகளின் தலைவராவதுதான் அமைதிக்கான நிரந்தர வழியாகயிருந்திருக்கும். அனுராதபுரம் தாக்குதலுக்குப் பழிவாங்க எளிதான ஒரு இலக்கை இலங்கை இராணுவம் அடித்துவிட்டதாகத் தெரிகிறது. ஈழம் இனி எங்கு செல்லுமென்று வருத்தமாயிருக்கிறது. அந்தப் புன்னகை மறைந்திருக்கத் தேவைவில்லை.

Tuesday, October 30, 2007

மக்கள் தீர்ப்பே...

ஜனாதேஷ் (மக்கள் தீர்ப்பு) என்னும் இயக்கம் பட்டையைக் கிளப்பிக்கொண்டிருக்கிறது! சமீபத்தில் சுமார் 25000 நிலமற்ற விவசாயிகள் (தலித்துகள்?) மத்திய பிரதேச மாநிலத்திலுள்ள குவாலியரிலிருந்து தில்லிக்கு நடந்தே வரும் சத்தியாகிரகம் செய்து அசத்தியிருக்கிறார்கள். இன்று இந்தியாவெங்கும் நிலமே பெரும் பிரச்சனையாகி வருவது நாம் அறிந்ததே.

தூத்துக்குடியிலிருந்து நந்திகிராம் வரை வெடித்துக் கொண்டிருக்கும் போராட்டங்களுக்கும், நாடேங்கும் பரவிவிட்டிருக்கும் நக்ஸல்வாதத்திற்கும் அடிப்படைக் காரணம் விவசாயிகளின் நில உரிமைப் பிரச்சனைகளே. ஆனால் நம்மில் பலருக்கு விசயத்தின் தீவிரம் இன்னும் சரியாக விளங்கவில்லை. ஏக்தா பரிஷ்த் என்னும் அமைப்பு இந்தியாவின் ஏழை விவசாயிகள், தன்னார்வளர்கள் துணையோடு இந்த ஜனாதேஷ் இயக்கத்தை ஆரம்பித்திருக்கிறார்கள். பாராட்டவேண்டிய, சிந்திக்கவேண்டிய விசயம்.

போராடும் விவசாயிகளின் கோரிக்கைகள் இங்கே. நிதின் சுட்டிக்காட்டிய 'தேசிய நிலக் கொள்கை' இங்கே.

Friday, October 26, 2007

நெஞ்சு பொறுக்குதில்லையே...

... இந்த இந்துமத வெறிபிடித்தக் கயவர்களை நினைத்துவிட்டால்... தெகல்கா பத்திரிக்கை வெளியிட்டுள்ள குஜராத் 2002 கலவரங்கள் பற்றிய விவரங்கள் நெஞ்சை உலுக்குகின்றன. ஒரு தாயின் வயிற்றிலிருந்த கருவைக்கூட விட்டுவைக்கவில்லை இவர்கள். இந்தப்பாவிகளில் பலர் அதற்கான தண்டனையை அனுபவிக்கப் போவதில்லை என்பது இன்றும் நடந்துவரும் கலவரம்தான்.

Thursday, October 25, 2007

மௌனம்...கொடூரம்!


சரி, சிங்கள ராணுவத்தைத் தாக்க வந்த தமிழ் தீவிரவாதிகள் என்றே இருக்கட்டும். ஆனால் இறந்தவர்களை நிர்வாண ஊர்வலம் நடத்தி, அதைப் படம்பிடிக்க, பார்க்க அனுமதித்து என்ன சாதித்துவிட்டார்கள் இவர்கள்? சுற்றியிருப்பவர்களின் மௌனத்துக் காரணம் சோகமா? ஆத்திரமா? இனவெறியா? படம் பிடித்து காசு பார்க்கும் ஆசையா? எதிர்த்து ஒரு சொல் சொன்னால் ராணுவம் கொன்றுவிடும் என்று பயமா? என்னப்பா நடக்குது...

ஆபத்துக்குதவும் தொழில்நுட்பம்...

சான்டியாகோவில் எந்தெந்த பகுதிகளில் காட்டுத்தீயினால் ஆபத்து, யாரெல்லாம் வீடுகளை விட்டு பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லவேண்டும், எங்கெல்லாம் நிவாரண முகாம்கள், மருத்துவமனைகள் உள்ளன போன்ற விசயங்களை கூகுள் படச்சேவை தெரிவிக்கிறது! ஆபத்துக்கு உதவுவதற்குத்தானே தொழில்நுட்பம்...

சான்டியாகோவில் ஆணிபுடுங்கும் எனது நண்பர்கள் சிலரும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். பாவம் போரடிக்கும் வேலையில் கொஞ்சம் excitement என்று எடுத்துக்கொள்ள வேண்டியதுதான்.

பி.கு: 1. சத்தியமா சொல்றேன், நான் போனப்ப மலீபு பெருமாள் கோயில் மூடியிருந்தது. அங்க தசரா கொண்டாடுறோம் பேர்வழி என்று நாங்க ஒன்னும் நெருப்பு வைத்து இந்தக் காட்டுத்தீயை ஆரம்பிக்கவில்லை.

பி.கு: 2. நான் நிறைய பாவம் செஞ்சிருக்கிறது உண்மைதான். ஆனா அதுக்காக போன வருடம் நான் லாஸ் ஏஞ்சலீஸ் வந்ததிலிருந்துதான் மழையே பெய்யாமல் பூமி வரண்டு காட்டுத்தீ வந்துட்டதா சொல்றது அபாண்டம்.

Monday, October 22, 2007

வாராய்...நீ வாராய்...

UTV நிறுவனம் உலகத் திரைப்படங்களுக்கான தொலைக்காட்சியை ஆரம்பிக்க இருக்கிறதாம். அருமையான செய்தி! நான் இந்தியாவுக்கு நிரந்திரமாகத் திரும்பும்போது எனக்கு ஏற்படும் மிகப்பெரும் 'இழப்பாக' நான் கருதுவது, இவை போன்ற அசாத்தியத் திரைப்படங்களைப் பார்க்கமுடியாமல் போகலாம் என்பதுதான். புதிய அலைவரிசையில், நான் ரசிக்கும் அளவுக்கு நல்ல படங்களைக் காட்டுவார்களா அல்லது அகிரா குரோசோவாவின் குப்பைகளையும், புரூஸ் லீயின் கோனாங்கிச் சண்டைகளையும் உலக சினிமா என்று அடித்துவிடுவார்களா என்று தெரியவில்லை. பார்க்கலாம்.

கனிமொழியும் நானும் ஒரே கடவுளைத்தான் வழிபடுகிறோம் என்று தெரிந்துகொண்டேன். மகிழ்ச்சி!

Sunday, October 21, 2007

திரைகடலோடியும் ...

... திருந்தமாட்டோம்! இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பாபி ஜின்டால், அமெரிக்க மாகானமான லூசியானாவின் ஆளுனராக தேர்ந்தெடுக்கப்பட்டதை, இந்திய பத்திரிக்கைகள் அடுத்த சில தினங்களில் குட்டிக்கரணம் அடித்துக் கொண்டாடும்!

ஆனால் அவரது "கடவுள் உலகைப் படைத்தார்", "கருக்கலைப்பு கூடாது", "இனவெறி எதிர்ப்புச் சட்டங்களின் கடுமையை குறைக்கவேண்டும்" போன்ற வாதங்கள் அசிங்கமாயிருக்கின்றன.

Friday, October 19, 2007

நான் கட்ஸிக்கு மாறிட்டேன்!

எனது மடிக்கணினியில் உபுண்டுவை Fiesty யிலிருந்து கட்ஸி கிப்பனுக்கு (7.10) உயர்த்துவது சுபமாய் முடிந்தது. அது நடந்த வேகம் மற்றும் சுலபம், ஒரு வேளை ஒன்றுமே நடக்கவில்லையோ என்று திகைக்கவைத்தது! இத்தனைக்கும் நான் எழுத்துரு, பொதிகள் ஆகியவற்றில் நிறைய குடைந்து வைத்திருந்தேன். நான் செய்திருந்த எல்லா மாற்றங்களும் அப்படியே இருக்கின்றன! உபுண்டு குழுவினர் 'upgrade'இல் பழம் தின்று கொட்டை போட்டுவிட்டார்கள். பாராட்டுக்கள்!

ICANN தளத்தில் தமிழ் url (http://தமிழ்.idn.icann.org/) பரிட்சிக்கப்படுவது குறித்து மடலாடர் குழுவிலிருந்து தெரிந்துகொண்டேன். நன்று!

Thursday, October 18, 2007

ஆதலினால் காதல் செய்வீர்...



வாழ்த்துக்கள்!

Monday, October 15, 2007

ஆழ்மனதின் கோலங்கள்...


ஒரு திரைப்படத்தை வைத்துக்கொண்டு பிரஞ்சுக்காரர்களால் என்னவெல்லாம் செய்யமுடியுமென்று வியப்பாகயிருக்கிறது. Un coeur en hiver (A heart in Winter) என்றொரு படம். அருமையான வயலின், சொக்கவைக்கும் Emmanuelle Beart, எல்லோருடைய சிறந்த நடிப்பு. இவைகளுக்கே இப்படத்தை தாராளமாகப் பார்க்கலாம்.

ஆனால் அதற்கும் மேலாக பாத்திரப் படைப்பு மற்றும் வசனத்தில் அதகளம் பண்ணியிருக்கிறார்கள்! காதல் மரத்தை சுற்றி விளையாடும் சாதரண விசயமில்லை. ஆழ்மனதில் வேரெடுக்கும் வலி, பொறுப்பு என்று ஒரு பொருந்தாக் காதலில் காட்டியிருக்கிறார்கள். படம் முழுக்க எண்ணங்களை வசனமாகப் பேசுகிறார்கள்!

நிற்க. இந்தப்படம் பார்த்தேயாக வேண்டியதுதான்! ஆனால் இதை ஓரளவுக்கு மேல் உங்களால் புரிந்துகொள்ள முடியவில்லை அல்லது ரசிக்க முடியவில்லை என்றால் நீங்கள் சாதரணமாக இருக்கிறீர்கள்! மனங்களையும், மனிதர்களையும் எடைபோடும் வேண்டாத வேலையில் இன்னும் இறங்கவில்லை என்று அர்த்தம்!

நான் சமீபத்தில் பார்த்து இன்னும் விமர்சனம் எழுதாமல் இருந்த Paradise Now, இந்த வார விகடன் வெளிச்சம் பகுதியில் வந்திருக்கிறது. நல்ல படம். பார்க்கலாம்!

Thursday, October 11, 2007

இந்தியர் என்னும் குரங்குகள்...

ஆயிரமாயிரம் ஆண்டுகள்
தம்மில் சிலரை சூத்திரராக்கினர்!
ஆபத்துக்குதவிய அனுமனை,
இராமாயணத்தில் வானரனாக்கினர்!
சிறிசந்தின் குரங்கு நடனத்தை,
யூடூபில் பார்த்து ரசித்தனர்!
நேற்று சைமண்ட்சு மீது இனவெறி காட்டி,
தாம் குரங்கென நிரூபித்தனர் இந்தியர்!

விக்கிபீடியா நிலவரம்

/. இல் விக்கிபீடியா குறித்து எதோ பேசிக்கொள்கிறார்கள். நான்கூட போன வருடம் சில மாதங்களுக்கு தமிழ் விக்கிபீடியாவுக்கு பங்களிப்பதாக பேர் பண்ணிக்கொண்டிருந்தேன். கடைசியில் ஒன்றுமே கிழிக்கவில்லை! விக்கிக்கு பங்களிப்பதற்கு அசாத்திய பொறுமையும், நல்ல மனசும் வேண்டுமென்று நினைக்கிறேன். இல்லை நிறுவனங்கள் மற்றும் நபர்கள் தாங்களே தங்களைப்பற்றி எழுதலாம். பள்ளிகள், கல்லூரிகள் மாணவர்களுக்கு வீட்டுப்பாடமாகக் கொடுக்கலாம்.

சரி, சரி, என்னுடைய சோம்பேறித்தனத்துக்கு சப்பை கட்டிக்கொண்டிருக்கிறேன். அவ்வளவுதான்!

Wednesday, October 10, 2007

காரவாஜியோ - என்றும் மரணமில்லை!


Damn you,
Imprisoned souls,
Love survives us,
But Art is Immortal.

காரவாஜியோவின் கதை. காராவாஜியோ 2007 என்று தொலைக்காட்சிக்காக எடுக்கப்பட்ட படம். அருமை!! மைக்கேலையும், அவர் படங்களையும் சொல்லவில்லை. அது தெரிந்ததுதான். படத்தில் வரும் பெண்களை எங்கப்பா புடிச்சீங்க? தூக்கமே வரவில்லை!! கூகுள் படத்தேடலில் அந்த அழகிகள் சரியாக அகப்படாதது கொடுமை!

படத்தை நேற்றிரவு UCLA திரைப்படக் கல்லூரியில் பார்த்தேன். புகழ்பெற்ற ஒளிப்பதிவாளர் Vittorio Storaro, இப்படத்தில் தான் கையாண்ட ஒளிப்பதிவு எது, ஏன், எப்படிகளை விளக்கினார். காரவாஜியோ படங்களையே படம் பிடிப்பதென்றால் சும்மாவா? கலக்கியிருக்கிறார்.

படத்தில் ஒரு காட்சியில், 'இயேசு ஒரு கன்னிக்குப் பிறந்தார்', 'இந்த உலகம் கடவுளால் படைக்கப்பட்டது' போன்ற அண்டப்புளுகுகளை எற்றுக்கொள்ளாத ஒருவரை, கம்பத்தில் வைத்து கொளுத்துகிறார்கள்! (Burnt at the stake). 400 வருடங்களுக்கு முன்பு உரோம சாம்ராஜ்சியத்தில் நான் இருந்திருந்தால்? ஆ! வாழ்க சனநாயகம், வாழ்க பேச்சுரிமை!!

Tuesday, October 09, 2007

வேதனை வென்ற கணம்..

...விவசாயி உயிரை மாய்த்த கணம், நம் இந்தியா தோற்கும் அதே கணம். 8 மணி நேரத்துக்கு ஒருமுறை இந்தியா தோற்பதாகத் தெரிகிறது. கடந்த சில வருடங்களில் நான் காபிக்கு செலவழித்த பணம் சிலரின் கடன்களை அடைக்கப் போதுமாயிருந்திருக்கும்...

காந்தி ஜெயந்தியன்று AID India அமைப்பு நடத்திய தீபாஞ்சலி நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன். அப்போது திரையிடப்பட்ட 'The Dying Fields' விவரணப்படத்தை பார்த்தேன்.

இந்திய விவசாயப் பேரழிவு குறித்து இங்கு படிக்கலாம். விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்வது உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து பிரதமருக்கு இங்கு வேண்டுகோள் விடுக்கலாம். விவசாயிகள் மாண்டுகொண்டிருக்க யுவராஜ் சிங்கிற்கு 1 கோடி ரூபாய் பரிசு அறிவித்த விவசாய அமைச்சர்/கிரிக்கெட் வாரியத் தலைவர் ஷரத் பவார் குறித்து சோசிக்கலாம்...

Monday, October 08, 2007

சாமியார்களுக்கு சாமியடிக்கும் சயின்ஸ்!

எத்தனை நாளைக்குதான் சாமியார்களும் பூசாரிகளும் கஷ்டப்பட்டு மக்களை மப்பில் வைத்திருப்பார்கள். பாவம் அவர்கள் ஓய்வு எடுக்கட்டும். அதேமாதிரி வெளிமாநிலத்தில் போய் 'ஜருகண்டி' கோஷத்தில் நாலே-கால்-அடி உருவத்தை பார்த்தால்தான் அந்த மப்பு கிடைக்கும் என்கிற அவல நிலையும் ஒழியட்டும். இவர்கள் சொல்வது போல் தெருக்கு தெரு 'கடவுள் பார்கள்' வந்து இவ்வயகம் திளைக்கட்டும்!

ஆமாம் இதே சேவையை வழங்கிவரும் கஞ்சா கருப்புசாமியும், மஜா மாதவியும் இனி என்ன செய்வார்கள்? உலகமயமாக்கலை எதிர்ப்போம்!!

சந்தி சிரிக்குது!

ம்...நான் சொன்னா கேட்கல... இங்க இவங்க சொல்றாங்க பாருங்க...

Monday, October 01, 2007

மெல்ல இனி எல்லாம் சாகும்...

வேடிக்கையாக இருக்கிறது. உலகில் இன்று பேசப்படும் 7000 மொழிகளில் பாதி இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் காணாமல் போய்விடுமாம்! ஆறு பேர் பேசும் மொழிகளைக்கூடக் காப்பாற்ற ஒரு கூட்டம் அலைந்து கொண்டிருக்கிறதாம். இன்னொரு கூட்டம் இதைப் பற்றியெல்லாம் இங்கு அரட்டையடித்துக் கொண்டிருக்கிறதாம்.

ஹாஹா! ஆறு கோடி பேர் பேசும் தமிழே சாகப்போகிறது. தமிழானாகிய நான் (!!!!?) பேசும் தமிழில் சுமார் 80 சதவீதம் வார்த்தைகள் தமிழே கிடையாது. இந்த அழகில் மொழிகளைக் காப்பாற்றுவதாவது வெங்காயமாவது. போங்கடா, போய் (ஆங்கிலத்தில்) வேலையைப் பாருங்கடா...

Wednesday, September 26, 2007

விடிவு காலம் பொறந்தாச்சு?!

திரைப்படங்களை திருட்டுத் தகடுகளில் பார்ப்பதில் பல சாதனைகள் புரிந்த அமெரிக்காவாழ் தமிழன் திருந்துவதற்கு ஒரு நல்ல சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது. அமெரிக்கர்களிடம் Netflix மற்றும் Blockbuster நிறுவனங்களின் கடிதசேவை (postஇல் தகடு வரும்) பிரபலமாகயிருக்கிறது. நானும் Netflix சந்தா வைத்திருக்கிறேன். அதில் தமிழ் படங்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வருகிறது! நீங்கள் அமெரிக்காவிலிருந்தால் Netflix சந்தா வாங்கி தன்மானத்தோடு தமிழ் சினிமா பாருங்கள். திருட்டுத்தளங்களில் காசு கொடுத்துப் பார்க்கும் இழிநிலை இனி வேண்டாம்! Netflix உலகத்திரைப்படங்களைப் பார்ப்பதற்கு நல்ல வழி என்பது கூடுதல் சிறப்பு.

என்னுடைய தற்போதைய வழிமுறை:

1. உலக மற்றும் இந்திய திரைப்படங்கள்: Netflix.
2. வணிக நோக்கமுள்ள புதிய படங்கள் (தமிழ், ஆங்கிலம், உலகம்): திரையரங்கு.
3. பாடல்கள்: யூடூப்.

பி.கு: நீங்கள் Netflixஇல் படம் பார்த்தால் அதற்கு மதிப்பெண் வழங்கத் தவறாதீர்கள். மற்றவர்களுக்கு உபயோகமாயிருக்கும்.

Monday, September 24, 2007

ஓ போடு!!!!!!!!!!!

Saturday, September 15, 2007

மென்விடுதலை நாள் வாழ்த்துக்கள்!


அனைவருக்கும் எனது மென்விடுதலை நாள் வாழ்த்துக்கள்! நீங்கள் இதுவரை கட்டற்ற மற்றும் திறந்தநிலை மென்பொருட்களை தழுவாதிருந்தால் இன்றே தொடங்கிடுக!

சரி இந்நாளைக் கொண்டாட இதோ ஒரு நல்ல வழி! எடுபுண்டுவின் அங்கமான ஜிகாம்பிரிஸில் போய் விளையாடுங்க! உங்களுக்கு தெரிந்த குழந்தைகளுக்கும் அறிமுகப்படுத்துங்க! தமிழே பேச, எழுதத்தெரியாமல், கல்வி, விளையாட்டு, கேளிக்கை என்றாலே ஆங்கிலம் மூலம்தான் என்கிற இழிநிலை நம் தலைமுறையோடு போகட்டும். வருகிற தலைமுறையேனும் சிறப்பாக வளரட்டும்!

நன்றி: உபுண்டு தமிழ் மற்றும் சென்னை லி.ப.கு. மடலாடர் குழுக்கள்.

Thursday, September 13, 2007

ஸாஹித்யம்

எனது நன்பர் விஜய் சுட்டிக்காட்டிய ஸாஹித்யம் என்னும் கர்னாடக சங்கீத விக்கி அருமை. சிறிகாந்த் உருவாக்கியுள்ள இத்தளத்தில் வர்ணங்கள் மற்றும் கிரிதிகளுக்கு பல மொழிகளில் பாடல் வரிகளும் அர்த்தங்களும் கிடைக்கின்றன. இதற்காக அவர் தானே உருவாக்கிய transலிபி என்கிற கருவியை பயன்படுத்தியிருக்கிறார். பாராட்டுக்கள்!

Wednesday, September 12, 2007

வாழ்வா சாவா?


IUCN என்கிற 'உலக இயற்கை மற்றும் இயற்கை வளங்கள் பாதுகாப்புக் கூட்டமைப்பு' அழிந்துகொண்டிருக்கும் உயிரினங்களின் பட்டியலை வெளியிட்டிருக்கிறது. நீங்களும் நானும் செய்யும் அட்டுழியங்களால் புல்், பூண்டு, பூச்சிகளென உயிரினங்கள் முற்றிலுமாய் அழிந்துகொண்டிருக்கும் கொடுமையை என்னவென்று சொல்வது?

உயிர்வலி எண்ணிக்கையில்...

16,306 - IUCN கணக்கெடுப்பில் அழிந்துகொண்டிருப்பதாக அறியப்பட்ட உயிரினங்கள்.
7850 - விலங்கினங்கள்்.
8456 - பறவையினங்கள், மற்றவை.
12%-52% - பெரிய உயிரினங்களில் அழிந்துகொண்டிருப்பவைகளின் சதவீதம்.
8% - பறவையினங்கள். (8 இல் 1)
22% - பாலூட்டிகள். (4 இல் 1)
31% - நீர் மற்றும் நிலத்தில் வாழ்பவை - Amphibians (3 இல் 1)
43% - ஆமை வகைகள்.
28% - Conifers என்கிற மரங்கள்.
52% - Cycads என்கிற செடிகள்.


பட விளக்கம்: காசிக்குப் போய் பாவத்தை கழுவினார்களோ இல்லையோ கங்கையை அசுத்தப்படுத்தி, அதன் மூலம் கரியால் என்கிற முதலையினத்தையே அழித்து மேலும் பாவம் செய்தனர் எம் மக்கள்!

படம் நன்றி: G. & H. Denzau.

Wednesday, August 29, 2007

காயத்ரீ மந்திரம்

ஓம் ! பூர்ப்புவஸ்ஸுவ: | தத்ஸவிதுர்வரேண்யம் | பர்க்கோ தேவஸ்ய தீமஹி | தியோ யோந: ப்ரசோதயாத் ||

ஓங்காரப் பொருளான எந்தப் பரமாத்மா நம்முடைய புத்தி சக்திகளைத் தூண்டுகிறாரோ அந்த அனைத்தையும் படைக்கிறவரான பகவானுடைய சிறந்த ஜோதிஸ்வரூபத்தைத் தியானிப்போம்.

We meditate upon the radiant Divine Light of that adorable Sun of Spiritual Consciousness; May it awaken our intuitional consciousness.

காயத்ரீ மந்திரத்திற்கு மேலே உள்ளது போன்ற சிறிய பெரிய அர்த்தங்கள் பல சொல்லப்படுகின்றன. பரமாத்மாவில் (Universal Being) எனக்கு நம்பிக்கை கிடையாது. பகவான் (கடவுள், Personal God) எனக்குத் தேவையில்லை! ஆனாலும் ஆக்கம் (கிரியை, creation) போற்றப்படவேண்டியதுதான். நாம் அறிவையும் உடலையும் வளர்த்துக்கொள்ள சூரிய ஒளி அத்தியாவசியம் என்பது இம்மந்திரத்திலிருந்து பெறத்தக்க குறைந்தபட்ச செய்தி! மேலும் தெரிந்துகொள்ள இங்கே செல்லவும்!

கோல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்!

கால்பந்தில் இந்தியா எதையாவது உருப்படியாக வென்றதாக நினைவிருக்கிறதா? ஆனால் 13 முறை முயன்று இந்த தடவை இந்தியா நேரு கோப்பையைக் கைப்பற்றியுள்ளது! வாழ்த்துக்கள்!

நேரு கோப்பை என்றவுடன் பல ஆண்டுகளுக்கு முன்னர், ஜெயலலிதா சென்னை நேரு விளையாட்டரங்கைப் புதுப்பித்து நடத்திய போட்டிகளின் நினைவு வருகிறது. விஜயன் ஒமானுக்கு எதிராக அடித்த கோலும், அதை எங்கள் தெரு மாமாக்கள்கூட கொண்டாடியதும், தென்கொரிய அணியின் சாகசங்களும் இன்னும் ஞாபகம் இருக்கின்றன.

சமீபத்தில் இந்தியா FIFA தரவரிசையிலும் சிறிது முன்னேறியிருக்கிறது. சரி, சரி, ஓப்புக்கு சப்பானிகள் பட்டியலில் கொஞ்சம் மேலே வந்திருக்கிறோம். அவ்வளவுதான்! ஆனால் சீனாவை உலகக்கோப்பைக்கு அழைத்துச்சென்ற ஹக்டன் நமது பயிற்சியாளராக அமர்த்தப்பட்டது ஒருவேளை பலன்களை கொடுக்க ஆரம்பித்திருக்கலாம். உலகக்கோப்பை சமயத்தில் நான் எழுதிய பதிவு இங்கே.

Tuesday, August 28, 2007

இத்தாலிய இம்சைகள்!

உலக சினிமா ரசிகர்களிடையே இத்தாலிய திரைப்படங்களுக்கு நல்ல பெயர் இருக்கிறது. அது ஏனென்று எனக்கு சற்றும் விளங்கவில்லை! சரி 1950-60 களில் அவர்கள் பல புகழ்பெற்ற படங்களை எடுத்திருக்கலாம். அதற்கென்ன இப்போ? அடுத்த 50 ஆண்டுகளில் அவர்கள் நல்ல படங்கள் எடுத்ததாகக் தெரியவில்லை.

நான் பார்த்த இத்தாலியப் படங்களில் The Bicycle Thief மட்டும்தான் நல்ல படமென்று நினைக்கிறேன். சமீபத்தில் 8 1/2 பார்த்தேன். சுத்த பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது! Fellini தான் பெரிய இயக்குனராக்கும் என்கிற இருமாப்பில் கண்டதையும் எடுத்து மக்களை பார்க்கவைத்திருக்கிறார்! Cinema Paradiso, Life is Beautiful எல்லாம் கூட நல்ல படங்களில்லை என்று கருதுகிறேன். சும்மா மூன்று மணி நேரத்துக்கு ரசிகர்களின் கழுத்தறுத்து நல்ல பெயர் வாங்கிவிட்டார்கள்!


நான் ஒரு நாட்டின் (மொழியின்) சினிமா தரத்தை மதிப்பிடுவதற்கு சமீபத்திய படங்களைப் பார்ப்பது வழக்கம். அதாவது 1980க்கு பின்னர் நல்ல படங்கள் எடுத்திருந்தால் பாராட்டலாம். அதற்கு முந்தைய படமாக இருந்தால் Casablanca மாதிரி காலத்தை விஞ்சிய படமாக இருக்கவேண்டும். அந்த வகையில் சமீபத்திய இத்தாலியப் படமான Catarina in the Big City பார்த்தேன். சுமார்தான். என்னுடைய கணிப்பின்படி பிரஞ்ச்சு, போலிஷ், ஜெர்மன், ஸ்பானிஷ் மற்றும் இரானிய மொழிப்படங்கள் தற்காலத்தில் சிறப்பாகயிருக்கின்றன.

மேலும், ஞாயிறன்று எனது 'தெய்வம்!' கெய்ஸ்லாவ்ஸ்கியின் No End என்கிற படத்தைப் பார்த்தேன். சுமாரான படம்தான். ஆனால் American Beautyயின் முதல் சில காட்சிகள் இதிலிருந்து தழுவப்பட்டிருக்கலாம் என்று நினைக்கிறேன். நேற்றிரவு El Bola என்கிற ஸ்பானியப் படம் பார்த்தேன். பார்க்கலாம்!

படம் காட்டுகிறார் கிருபா!

கிருபா அவர்களின் வலைபரப்புத் தளம் பற்றி நீங்கள் ஏற்கனவே தெரிந்துகொண்டிருக்கலாம். அது பற்றிய ஒரு பத்திரிக்கை செய்தி இங்கே. இவர் BarCamp சென்னை நடத்தியவர்களில் ஒருவர். தமிழில் BarCamp நடத்த யாராவது திட்டமிட்டால் இவரது உதவியைக் கோருவது பயனுள்ளதாக இருக்கலாம். யூடூபில் தமிழ் பதிவர் பட்டறை பற்றிய சிலரின் ஓளித்துண்டுகளைப் பார்த்தேன். நல்ல முன்னேற்றம் தெரிகிறது. தமிழ் PodCamp நடத்தும் நேரம் வந்துவிட்டதோ?

விளையாடலாம் வாங்க...

உலக சைபர் விளையாட்டுப் போட்டிகள் 2007 இன் சென்னை பகுதி இப்போது நடைபெறுகின்றது. போய் முயன்று பாருங்களேன்! குறைந்தபட்சம் T-சட்டை கிடைக்கும் போலிருக்கிறது!

Friday, August 24, 2007

உடைத்தார்கள் வென்றார்கள்...

சியாம் அவர்கள் iPhone, AT&T நிறுவனத்தின் தொலைபேசி சேவையில் மட்டுமே செயல்படும் என்பதான மென்பூட்டு உடைக்கப்பட்டிருப்பது பற்றி எழுதியிருக்கிறார். நான் iPhone வாங்கும் உத்தேசமில்லாவிட்டாலும் நல்ல செய்திதான். அதே சமயத்தில் தொலைபேசி சேவை மாறும் போது எண்னை தொடர்ந்து வைத்துக்கொள்ளும் மிகச்சாதாரண வசதிகூட இல்லாத கற்கால இந்தியர்களை நினைத்து வருத்தப்படுகிறேன்! ராஜா, மாறனுடன் குஸ்தி முடிந்த பிறகு வேலை செய்ய ஆரம்பித்தால் இது குறித்து முடிவெடுப்பாராம்!

ஹய்யா!

ISO வாக்கெடுப்பில் மைக்ரோசாப்டின் OOXML தரத்துக்கு எதிராக வாக்களிப்பதென இந்திய தரக் கட்டுப்பாட்டு நிறுவனம் (BIS) முடிவு செய்திருக்கிறது. வரவேற்கத்தகுந்த முடிவு. OASIS இன் ODF ஏற்கனவே தரமாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது நீங்கள் அறிந்ததே.

இது பற்றிய செய்திகள் இங்கே, இங்கே மற்றும் இங்கே. இச்சுட்டிகளை எனக்களித்த ILUGC மடலாடர் குழுவுக்கு நன்றி!

அதே சமயத்தில் ODFஐ ஆதரிக்கும் கூகுள் மற்றும் சன் நிறுவனங்களின் மற்றொரு செயல் எனக்கு சரியாகப் படவில்லை. அதாவது கூகுள் பொதியில் (Google Pack) சன் ஆபிஸ் மென்பொருளை சேர்த்துத் தருவது தொழில் நேர்மையற்ற (Anti-Trust) செயல் என்று நான் நினைக்கிறேன். கூகுள் OpenOffice மென்பொருளை MS Office க்கான இடைமுகப்புகளுடன் கொடுந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

Thursday, August 23, 2007

நம்ம சென்னை!

சரி, சரி உங்களுக்குத் தெரிந்ததுதான்...இன்று சென்னை தினமாம். அதாவது நாயக்கர்கள் இன்றைய சென்னை மாநகரத்தின் சில பகுதி நிலங்களை ஆங்கிலேயருக்கு ஆகஸ்ட் 22, 1639 இல் விற்றதை சென்னை தினமாக அனுசரிக்கிறார்கள். இதற்காக சென்னை வாரம் என்று சிலபல நிகழ்ச்சிகளுக்கும் எற்பாடு செய்யப்பட்டு நடந்துவருகின்றன. நீங்கள் சென்னையில் இருந்தால் கலந்துகொள்ளுங்களேன்!

சென்னை வாரம் பற்றிய சில பத்திரிக்கை செய்திகள் இதோ...இந்து1, இந்து2, இந்து3, CNN-IBN,

Friday, August 17, 2007

சந்தோஷம்!

சுமார் 80 ஆண்டுகள் உழைத்துப் பெற்ற சமூக நீதியை இவ்வாறு கட்டிக் காப்பற்றும் தமிழக அரசுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்!

Thursday, August 16, 2007

கலக்கல் இந்தியா!



ம்... Splendor என்ற வார்த்தைக்கு என்ன தமிழ் சொல் என்று தெரியாததால் இந்த தலைப்பு. நேற்றிரவு எனது வீட்டிற்கு அருகில் நடைபெற்ற India Splendor என்ற நிகழ்ச்சிக்கு சென்றிருந்தேன். இந்தியில் ஆட்டம் பாட்டும் கொண்டாட்டம்! சோனு நிகம் நன்றாகவே பாடினார். பிபாஷா பாசு (எ) மாமி ரொம்பவும் கஷ்டப்பட்டு ஆடினார். லாஸ் ஏஞ்சலீஸிலேயே இருக்கும் ஒரு நடனக்குழு கலக்கினார்கள்.

பல வருடங்களுக்கு பிறகு சுதந்திர தினத்துக்காக நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன். இலவசமாகக் கலை நிகழ்ச்சிகளைப் பார்க்க கசக்குமா என்ன? சுபின் மேத்தா, விக்ரம் சந்திரா, மணிரத்னம், விது வினோத் சோப்ரா உள்ளிட்ட பல பேருக்கு எதோ உருப்படாத விருதெல்லாம் கொடுத்தார்கள். அவர்களில் பலரும் பேசிக் கழுத்தறுத்தார்கள்! மணி 'நன்றி' மட்டும் சொல்லி புண்ணியம் கட்டிக்கொண்டார். இந்தியாவின் 61 ஆவது சுதந்திர தினத்தை உலகிலேயே கடைசியாகக் (பசிபிக் நேரம்) கொண்டாடி மகிழ்ந்தோம்!

Wednesday, August 15, 2007

ஆனந்த சுதந்திரம்!

அனைவருக்கும் எனது இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்! இந்த இளமையான நாட்டிற்கு அறுவது வயசாகுதுன்னு சொல்றீங்களேப்பா?!

படம்: நன்றி AFP, பிபிசி.

Monday, August 13, 2007

அழகுப் பெண்ணின் நிரல் என்றால்...

... அது 'அழகு நிரல்' என்றே அர்த்தமா? இல்லையென்றால் இங்கு போய் அழகு நிரல் எப்படியிருக்குமென்று தெரிந்துகொள்ளுங்குள். எனது அலுவலகத்தில் ரவுண்டு அடித்துக்கொண்டிருக்கும் 'அழகு நிரல்' என்ற புத்தகம் எப்போது என் கைக்கு வருமென்று காத்துக்கொண்டிருக்கிறேன்!

சி++ அடுத்து எங்கே போகவேண்டுமென்று Stroustrup இங்கே பேசியதை சிலேஷ்டாடில் தெரிந்துகொண்டேன்.

அழகு, நிரல் பற்றி பேசிக்கொண்டிருக்கும் போது இதையும் சுட்டிக்காட்டிடறேனே. இங்கே போய் கல்லடி (Rock?!) பாடல்கள் கேட்கலாம். தமிழ் பொண்ணுதாங்க நடத்தது. FreeBSD புலி! போய் உற்சாகப்படுத்துங்க!

அடுத்தது என்ன? ஒருங்குறி 1.1

தமிழ் இணையதளங்களை ஒருங்குறியில்(யிலும்) வழங்குமாறு கோரி இந்த தளத்தின் மூலம் கோரிக்கை வைக்கலாம் என்கிற ரவியின் யோசனைக்கு எனது முழு ஆதரவு உண்டு! ஆனால் என்ன கோரிக்கை வைப்பது என்பது கொஞ்சம் மூலையை கசக்க வேண்டிய விசயமாகத் தெரிகிறது! இருந்தாதானே கசக்குவதற்கு! அதனால் இதை விசயமறிந்தவர்கள் செய்யுமாறு வேண்டுகிறேன். எனக்கு தோன்றும் சில விசயங்கள் கீழே!

1. தமிழில் படிப்பதற்கும் எழுதுவதற்கும் எழுத்துரு, எ-கலப்பை, அஞ்சல், தமிழ்விசை என்று எதையாவது நிறுவித்தான் ஆகவேண்டும் என்கிற நிலை ஒழியும்வரை நாம் போராடித்தான் தீரவேண்டும்.
2. அந்த உடோப்பியா வெகுதொலைவில் இருந்தாலும், குறைந்தபட்சம் தமிழ் இணையதளங்கள் எந்த தரத்தையுமே கடைபிடிக்காமல் விட்டேத்தியாக ஏதோவொரு எழுத்துருவை பயன்படுத்துவதற்கு எதிராக முதலில் போராடவேண்டும்.
3. 'நாளிதழ்களுக்கு ஒருங்குறி பற்றிக் கவலையில்லை' என்பது சரியான வாதமில்லை போலிருக்கிறது. தினமலர் நாளிதழ் 'கடைசி செய்திகள்' பக்கத்தை ஒருங்குறியில் வெளியிடுகிறார்கள். அவர்கள் அதையே பிறபகுதிகளுக்கும் செய்தால் நன்றாக இருக்கும். இதை ஊக்குவிக்கும் 'Shawshank Redemption' மாதிரி முயற்சியாய் தினமும் இரண்டுமுறையேனும் அவர்களின் ஒருங்குறி பக்கத்திற்கு செல்லப்போகிறேன்.
4. 'சக்கரத்தை திரும்பவும் கண்டுபிடிக்காதே' என்கிற மாதிரி, இது சம்பந்தமா ஏற்கனவே நடந்த முயற்சிகள் குறித்து விசயமறிந்தவர்கள் எழுதுங்கள். திஸ்கியில் இதுகுறித்து என்ன பேசிக்கொண்டார்கள் என்று தெரிந்துகொள்ள இங்கு போய் படிக்கலாம்.
5. மொசில்லா உலாவியில் திஸ்கியை கொண்டுவர என்ன செய்யலாம் என்று பேராசிரியர் கல்யாண் எழுதிய மடல்தான் கடைசியாய் எனக்குக் கிடைத்த செய்தி. அதற்குப்பிறகு என்ன ஆயிற்று என்று அறிய ஆவல். அந்த மடல் கிழே.

Dear Mani and friends:

Soon after we got the good news that TSCII is now officially part of the international IETF/IANA charset registry, I made some suggestions on avenues we can pursue further work.

With formal registration, any web browser can include TSCII as one of the charsets for users to display webpages. I indicated that with Mozilla Firefox browser (which works almost like open source product), with some volunteers effort, we can get them to automatically recognize a TSCII-based webpage and display it using any TSCII font chosen in the font preferences.

With auto-recognition of the encoding used in a given text (in the way it is done with file convertor of Murasu Anjal), browser can put up a pop up message for a TSCII based webpage (but using user-defined charset) that it can display the page using TSCII text as a choice.

I am sure there are many in this forum like Mugunth who worked on open source office and plug-ins for Mozilla have better ideas and suggestions than I can give.

IMHO this is an area we can have some brain-storming here to see what is possible and to assemble a team subsequently.

anbudan
Kalyan


இது என்ன சங்கதி? ஒருங்குறியும், திஸ்கியும் 'default' ஆக கணினியில்/இணையத்தில் இருப்பதுதான் நமது உடோப்பியாவா? ஒன்றுமே செய்யாமல் படிக்க ஒருங்குறிப்பக்கம், நன்றாக/அழகாகத் தெரிகிற திஸ்கி பக்கம் என்பதுதான் இணையதளங்களுக்கான தாரக மந்திரமா? யாராவது கேட்டுச் சொல்லுங்களேன்...

Sunday, August 12, 2007

இனி நான் நாத்திகனில்லை...


... கிரைஸ்டாஃப் கெய்ஸ்லாவ்ஸ்கி அவர்களை கடவுள் என்று ஒத்துக்கொள்கிறேன்! இப்போதுதான் 'வெரோனிகாவின் இரட்டை வாழ்க்கை' என்ற படத்தை பார்த்து முடித்தேன். இப்படியெல்லாம் படம் எடுக்கமுடிந்தவர் கடவுளாகத்தான் இருக்கவேண்டும்!

இது நான் பார்க்கும் அவருடைய 15ஆவது படமாகும். அத்தனையும் காலத்தால் அழியாத பொக்கிஷங்கள். மிச்சம் இருப்பவற்றையும் பார்க்காமல் விடுவதாகயில்லை. நீங்களும் பாருங்கள்! இது வரை நான் பார்த்திருப்பவை,

1. மூன்று நிறங்கள்: நீலம், வெள்ளை, சிவப்பு.

இந்திரா படத்தில் வரும் நாயகி சுவரில் கையை உராசும் காட்சியை சுஹாசினி நீலம் படத்திலிருந்துதான் எடுத்தார்.

2. Dekalog.

10 பாகங்கள். 1, 5 மற்றும் 7 அற்புதமானவை. இதில் இரண்டு பகுதிகள் முழு படமாக வந்தன. இது பற்றிய எனது ஆங்கில பதிவு இங்கே. Stanley Kubrick இந்த தொடர்தான் உலக திரைப்பட வரலாற்றின் ஒரே Master Piece என்று குறிப்பிட்டார்!

3. Blind Chance.

சமிபத்தில் மறைந்த இயக்குனர் ஜீவா, 12B கதையில் வரும் 'பேருந்தை நாயகன் பிடித்தால், பிடிக்காவிட்டால்' என்கிற நுட்பத்தை இங்கிருந்துதான் எடுத்திருந்தார். அவரை குறைசொல்லிப் பயனில்லை. Run Lola Run என்கிற புகழ்பெற்ற ஜெர்மானிய படத்திலும் இதே நுட்பத்தை கொஞ்சம் மாற்றி பயன்படுத்தியிருந்தார்கள்.

4. வெரோனிகாவின் இரட்டை வாழ்க்கை.

நம்பினால் நம்புங்கள்!

சுர்முரி சுட்டிக்காட்டிய நிகழ்படம் கீழே!



இந்த அதிசயத்தை அத்தனைபேர் கூடி நின்று பார்த்தார்கள் என்பது இன்னும் பெரிய ஆச்சரியம்! போன தடவை Yellowstone போனபோது எடுத்த பின்வரும் படங்களை வைத்தே, பல நாட்களுக்கு நாங்கள் scene போட்டுக் கொண்டிருந்தோம் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்!





Saturday, August 11, 2007

கூடி வாழ்ந்தால்...



... நேரம் விரயம்! சரி எப்படியும் இணையத்தில் கடலைபோட்டு நேரம் வீணாகத்தான் போகிறது என்று நீங்கள் கருதினால் Flock என்கிற 'சமுதாய உறவுகளுக்கான' உலாவியை பயன்படுத்தலாம். இது பயர்பாக்ஸ் உலாவியை அடித்தளமாகக் கொண்டது. மேலே படத்திலுள்ளபடி youtube, flickr போன்றவற்றின் ஓடைகளை உலாவியின் மேற்பகுதியிலிருந்தே கையாளலாம்.

Friday, August 10, 2007

அடுத்தது என்ன? ஒருங்குறி 1.0

தமிழ் இணையதளங்களை ஒருங்குறி வழிக்குக் கொண்டுவர என்ன செய்யவேண்டுமென்று பத்ரி அவர்கள் இங்கு எழுதியிருக்கிறார். முயன்று பார்க்கவேண்டியவைதான்! இது சம்பந்தமா மாற்று! மடலாடர் குழுவில் நான் போன வாரம் தெரிவித்த யோசனை கீழே! அவசரத்தில் ஆங்கிலத்தில் எழுதியதை இங்கு ஒட்டுவற்கு மன்னிக்கவும்.

why don't we start a campaign to make tamil news papers/magazines/portals to turn unicode and firefox/linux friendly? if there are 2000 tamil bloggers, it looks incredibly stupid on the part of these sites not to use unicode. i have something like a petition/hall of shame in mind. say we create a wordpress blog and redirect something.maatru.net to it.

we write a general request to papers urging them to turn to unicode,blah, blah... (if I remember correctly Ravi has written something like this already). we request bloggers to come and sign this petition (with name, email, tamil blog url and few optional words) as comment. in the utopian event that some site actually heeds our advice or does it by itself, we remove them from the hall of shame.

why shud maatru do it? b'cos we need to choose our targets carefully. appealing to some random movie site doesn't make sense. also we need to delete junk comments and the ones without proper blog url. lets be authentic. if there are 200 comments then 200 serious tamil bloggers
have signed the petition!

மேலே என்ன உளரியிருக்கிறேன் என்றால், "ஒருங்குறியில் தளத்தை வெளியிடமாட்டேன், பயர்பாக்ஸில் தெரியுதா என்று எங்களுக்குக் கவலையில்லை" என்று அழிச்சட்டியம் செய்யும் தளங்களுக்கு எதிராகவொரு கூட்டுப்பதிவு தொடங்குவது. தில்லி லினக்ஸ் பயனர் குழு முன்பு வைத்திருந்த பக்கம் நல்ல உதாரனம். கோரிக்கை, அவமானச்சின்னமாக அறிவிப்பது, எச்சரிக்கை, புறக்கனிப்பு என்று சாம, பேத, தாண, தண்டம் எல்லாவற்றையும் செய்துபார்க்கவேண்டும்!

ஆளாளுக்கு இதைச்செய்யலாம், ...லாம், ...லாம் என்று ஆரம்பித்துவிட்டோமோ? இன்னும் சில யோசனைகள் வைத்திருக்கிறேன். அடுத்த சில தினங்களில் சொல்லிடறேனே!

வேணும்டா உனக்கு!

1. நான் விகடன் இணையதளத்தில் சந்தா செலுத்திப் படிக்கிறேன்.
2. சில வருடங்களுக்கு முன்பு ஒரு நன்பர் கேட்டுக் கொண்டதற்கிணங்க அவருக்கு அத்தளத்திற்கான எனது மின்னஞ்சல் பயணர் கணக்கையும் கடவுச்சொல்லையும் தெரிவித்திருந்தேன். (தப்புதான்! மன்னிச்சுடுங்க விகடன் தாத்தா!)
3. சில மாதங்களுக்கு முன்பு நான் விகடன் தளத்தில் ஒரு இ-புத்தகத்தை வாங்கியதாகவும் (?!!) அதை தரவிறக்கம் செய்ய இங்கே செல்லவும் என்று எனக்கு மின்னஞ்சல் வந்தது! அந்த நன்பர் எனது கணக்கை இன்னும் பயன்படுத்துகிறாரா என்றே தெரியாததால் அதை அப்படியே விட்டுவிட்டேன்.
4. நேற்று எனது கடவுச்சொல்லை நான் மறந்து (?!) அதை மாற்றக்கோரியதற்கு இணங்க புதிய கடவுச்சொல் இதுதான் என்று விகடனிடமிருந்து மின்னஞ்சல் வந்தது!
5. இன்று எனது மின்னஞ்சலின் கடவுச்சொல்லையே நான் மறந்துவிட்டதாகவும் (?!!), அதை மாற்றக் கோரியதற்கிணங்க, அதற்கான வழிமுறை இதுதான் என்று அந்நிறுவனத்திடமிருந்து வேறோரு முகவரிக்கு மின்னஞ்சல் வருகிறது!

"சும்மா தெருவில் போறவங்களையெல்லாம் பிடித்து இ-தமிழ் படிக்க வைக்கவேண்டும்"னு பதிவாடா போடுற? வேணும்டா உனக்கு!

"நான் விகடன் படிக்கிறேன்" என்று முன்னாடி எழுதிய பதிவைப் படித்த யாரோ ஒருத்தர்தான், இப்போ என் கடவுச்சொல்லை அடைய நினைக்கிறாரோ? நேரடியா கேளுங்கப்பு! நானே காசு கொடுத்து உங்களுக்கு சந்தா வாங்கித்தருகிறேன்.

Thursday, August 09, 2007

அடுத்தது என்ன? திங்கள்தோறும் தமிழ்!

'திங்கள்தோறும் தமிழ்' என்று ஒரு இயக்கம் ஆரம்பிக்கலாம். 'இந்த வாரம்... தமிழ் வாரம்' என்று நீங்கள் வைத்துக்கொண்டாலும் எனக்கு பரவாயில்லை! இந்த இயக்கத்தில் என்ன பண்ணனும்னா மாதத்திற்கு ஒருமுறையேனும் இணைத்தமிழுக்கு உருப்படியா எதாவது செய்யனும். சும்மா ஒரு கும்மி பதிவு போடுவதையெல்லாம் கணக்கில் சேர்த்துக்கொள்ள முடியாது!

உருப்படியா என்றால்?

1. த.வி.யில் ஒரு கட்டுரையோ, சில குறுங்கட்டுரைகளோ எழுதலாம். என் ஊர், நான் படித்த பள்ளி, கல்லூரி, பார்த்த படம், இன்று தெரிந்துகொண்ட விசயம் மாதிரி கட்டுரைகள் எழுதுவது உத்தமம். விக்சனரி, விக்கி மூலம் போன்றவற்றிலும் பங்கெடுக்கலாம்.
2. மதுரை திட்டத்திலோ, லினக்ஸ் குழுமங்களிலோ தேவைப்படும் ஒரு பக்கத்தை தமிழாக்கம் செய்தோ, விசையடித்தோ கொடுக்கலாம்.
3. நன்பர் ஒருவரைப்பிடித்து (அவர் வேண்டாம், வேண்டாமென்று சொன்னாலும்) அவர் கணினியில் தமிழ் எழுத்துருக்கள் சரியாக இருக்கிறதா என்று உறுதி செய்து, அவருக்கு தமிழில் எழுதவும் சொல்லித்தரவேண்டும்.
4. இ-தமிழ் எழுதப்படிக்க தெரிந்த ஒருவரை வலைப்பதிவு தொடங்கவைத்தோ, த.வி, மாற்று!, உபுண்டு போன்ற தன்னார்வு குழுக்களுக்கு அழைத்துச்சென்றோ கையை நனைக்கவைக்கவேண்டும்!
5. சற்றுமுன், மாற்று!, கில்லி, வாழ்த்தலாம் வாங்க மாதிரி இணைந்து பணியாற்றலாம்.
6. மென்பொருள் வல்லுனராகயிருந்தால் லினக்ஸ் குழுமங்களில் போய் ஒரு வழுவை கலைந்துகொடுக்கலாம்.
7. முக்கியமா இதெல்லாம் செய்துவிட்டு அதுபற்றி பதிவெழுதலாம். என்னைக் கேட்டால் பொறாமைதான் ஒரு நல்ல உந்து சக்தி! மற்றவர் செய்வதைப் பார்த்துவிட்டு 'நாம் ஒன்றும் செய்யாமல் இருக்கிறோமே!' என்று யோசித்தால்தான் எதுவுமே நடக்கும்.

இதையெல்லாம் தினமுமே செய்யும் சில புண்ணியவான்கள் இருக்கிறார்கள். அவர்கள் இந்த இயக்கத்தைப் பார்த்து சிரிக்கக்கூடாது, சரியா?

மேலும் வரும்...

Wednesday, August 08, 2007

அடுத்தது என்ன? திரை விமர்சனம்

இதுவொரு கும்மி யோசனைதான்! ஆங்கிலத்திலுள்ள அழுகியதக்காளி மாதிரியான தளத்தை தமிழில் கூட்டுப்பதிவா ஆரம்பிக்கலாம். இ-தமிழர்கள் முடிந்தவரை தமிழில் எழுதுவதையோ படிப்பதையோ தவிர்க்கிறார்கள். பண்ணிரண்டாம் வகுப்புக்குமேல் தமிழே பயன்படுத்தாத ஒரு 'படித்த' சமூகம் உருவாகிக்கொண்டிருக்கிறது. ஆனால் பெரும்பாலான இ-தமிழர்கள் தமிழ் திரைப்பட விமர்சனங்களை ஆங்கிலத்தில் படிக்கத்தான் செய்கிறார்கள். இங்கதான் நாம் வருகிறோம்!

அதாவது சற்றுமுன், மாற்று! மாதிரி ஒரு கூட்டுபதிவோ தளமோ ஆரம்பிக்க வேண்டியது. அங்கு தமிழில் வெளிவருகிற திரைப்படங்களின் பத்திரிக்கை விமர்சனங்களுக்கு இணைப்பு தருவது. ஒருங்குறியில் இந்த பதிவு இருந்தாலும் தமிழ் படிக்க சிரமப்படுபவர்களுக்கும் ஏதுவாக ஆங்கில வார்த்தைகளையும் தேவையான அளவு பயன்படுத்துவது. ம்... என்ன சொல்ல வருகிறேனென்றால், சாதாரணமாக தமிழ் படிக்க எத்தனிக்காத தமிழனை திரைப்பட ஆசைக்காட்டி இணைத்தமிழ் உலகுக்கு அழைத்துவரவேண்டும்!

ஒவ்வொரு திரைப்படத்துக்கும் இதுவெல்லாம் நம்ம பதிவில் இருக்கவேண்டும்.

1. திரைப்படத்தின் இணையதளத்துக்கான சுட்டி.
2. தமிழ் மற்றும் ஆங்கில விக்கிபீடியா, IMDB தளங்களிலுள்ள இந்த படத்தின் பக்கங்கள். த.வி.யில் இல்லையென்றால் சும்மா ஒரு குறுங்கட்டுரையாவது எழுதிப்போட்டுவிடவேண்டும்.
3. இந்த கூட்டு பதிவிற்கு பங்களிப்பவர்கள், ஆர்வமுள்ளவர்களின் சொந்த விமர்சனங்கள். ஆங்கிலத்தில்கூட இருக்கலாம்.
4. பத்திரிக்கைகளில் (இந்து, sify) வரும் விமர்சனங்களுக்கான இணைப்புகள்.
5. வலைப்பதிவுர்கள் எழுதும் விமர்சனங்களின் இணைப்புகள். கூகுளில் தேடியோ, ரீடரில் சேர்த்தோ இவற்றை பெறலாம்.

மாற்று! மாதிரி 'சிறுதுளி பெருவெள்ளம்' விதிமுறைதான் இதுக்கு சரிப்படும். இது மாதிரியான பதிவிற்கு பங்களிக்க எனது நன்பர்கள் சிலர் விருப்பம் தெரிவித்திருக்கிறார்கள். நீங்களும் விரும்பினால் சொல்லுங்கள். சேர்த்து வைக்கிறேன்!

மேலும் வரும்...

Tuesday, August 07, 2007

அடுத்தது என்ன? பட்டறைகள்

தமிழ் வலைப்பதிவர் பட்டறைக்குப்பிறகு என்ன? என்று சில பதிவுகளில் படித்தேன். எதோ நம்மாலான உதவாக்கரை யோசனைகளை கொடுக்கலாமே...

BlogCamp - தமிழ் வலைப்பதிவர் பட்டறை.
BarCamp - ?
WikiCamp - ?

தமிழ் வலைப்பதிவர் பட்டறை ஆண்டு தோறும் நடத்தலாம். மாதத்துக்கு இரண்டு தடவை நடத்துவது இதை சாகடிக்க நல்ல வழி! பாரதியார், பாரதிதாசன் போன்ற பிற பல்கலைக்கழகங்களில் போய் நடத்தலாம்.

BarCamp போன்று தமிழ் மென்பொருள் பட்டறை ஒன்று ஆரம்பிக்கலாம். சும்மா லினக்ஸ் பிரசார நெடியடிக்காமல் தமிழ் தெரிந்த மென்பொருளாளர்களை Unconference-க்கு அழைத்து தமிழ் மென்பொருள் வளர்ச்சி குறித்து அரட்டையடிக்கலாம். தமிழர்களைவிடவும் கணினி அறிவுள்ள இளைஞர்கள் (எண்ணிக்கையில்) வேறு எங்கு இருக்கப்போகிறார்கள்! அவர்களை எல்லாம் தமிழ் மென்பொருள் வளர்ச்சிப்பணிக்கு அழைத்துவரவேண்டும்.

விக்கிகேம்ப் நடத்துமளவுக்கு தமிழ் விக்கிபீடியாவோ இன்னபிற மென்பொருள் விக்கிகளோ தமிழ்நாட்டில் பரிச்சயமடைந்துவிடவில்லை என்று நினைக்கிறேன். தமிழ்நாட்டிலிருந்து பலபேர் பங்களிக்க வரும்வரை இணையத்திலேயெ நடத்திக்கொள்ள வேண்டியதுதான்.

மேலும் வரும்...

Monday, August 06, 2007

உச்சம்!



Bourne Ultimatum பல மாதங்களுக்குப் பிறகு வந்துள்ள தரமான ஹாலிவுட் திரைப்படம். தாராளமாகப் பார்க்கலாம். நல்ல திரையரங்கில் பார்க்கவும்.

கலக்கிட்டீங்க போங்க!

தமிழ் வலைப்பதிவர் பட்டறையை செவ்வனே நடத்திமுடித்த அனைவருக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்கள். இது பற்றிய சில பதிவுகள் கிழே.

1. சென்னை வலைப்பதிவர் பட்டறை திட்டமிடப்பட்டது எப்படி?
2. பதிவர் பட்டறை - என் பார்வை..
3. சென்னை பட்டறை:- விடுபட்ட.., சொல்லவேண்டிய முக்கியமாக தகவல்!
4. செனனைப் பதிவர் எகஸ்பிரஸ்

செய்திகளில்...

1. இந்தியன் எக்ஸ்பிரஸ்.
2. CNN-IBN.
3. இந்து.

Thursday, August 02, 2007

கிருஷ்ணா நீ பேகனெ பாரோ...

1984 தில்லி கலவரத்துக்கு மன்மோகன் சிங் அழுது முக்காடு போட்டாகிவிட்டது. பாகல்பூர் கலவரம், மும்பை மற்றும் கோவை குண்டுவெடிப்புச் சம்பவங்களுக்கு காரணமான கயவர்கள் தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள். குஜராத் கொலை வெறியர்கள் முழுமையாக தண்டிக்கப்பட வாய்ப்பில்லாவிட்டலும் எதாவது கொஞ்சமாவது நீதி கிடைக்க சிலர் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் 1993 மும்பை கலவரத்துக்கு காரணமானவர்களின் மீது ஒரு துரும்புகூடப் படவில்லை. நாட்டின் ஒன்றாம் நெம்பர் தருதலை பால் தாக்கரே தண்டிக்கப்படுவதற்கான முகாந்திரமேயில்லை. நீங்கள் இதுகுறித்து ஏதாவது செய்ய விரும்பினால் அமித் வர்மா சுட்டிக்காட்டிய இந்த வேண்டுகோளில் கையெழுத்திடலாம். குறிப்பு: இது தீஸ்தா செட்லாவத்தால் ஆரம்பிக்கப்பட்டது. அவரை உங்களுக்கு பிடிக்காதென்றால் நான் முன்னமே தெரிவிக்கவில்லை என்று என்னிடம் எகிரிப் பயனில்லை.

ம்... இவ்விசயத்தில் ஏதாவது நடக்கவாவது வாய்ப்பிருக்கிறது. ஆனால் மும்மை 7/11 கோர தாக்குதலுக்கு நீதி கிடைக்க வாய்ப்பேயில்லை. 7/11/06 அன்று நான் எழுதிய பதிவு இங்கே. அதற்கு காரணமானவர்கள் என்னவானார்களென்று யாராவது மன்மோகன் சிங்கிடம் கேட்டுச்சொன்னால் தேவலாம்.

Wednesday, August 01, 2007

பச்சை நிறமே...பச்சை நிறமே...

எனது நன்பர் கவுரவ் சுட்டிக்காட்டிய பக்கம் இங்கே. கலக்கல்! Flickr உலகம் அற்புதமானதென்று எனக்குத் தெரிந்துதான் இருக்கிறது. ஆனால் எனது படங்கள் அசிங்கமாக இருக்கிறதென்கிற தாழ்வுமனப்பான்மையாலும், விரும்புகிற அளவுக்கு நான் பயணிப்பதில்லை என்கிற குற்ற உணர்ச்சியினாலும் நான் அங்கிருந்து விலகியே நிற்கிறேன்! சரி, இழேயுள்ள சிட்டுகளை ரசித்து மனதை தேற்றிக்கொள்கிறேன்...



நன்றி: பார்க்.



நன்றி: கிலினிஷ்.

வயித்தெரிச்சல்...

நேற்று வந்த இந்த கணக்கெடுப்பு போதாதென்று இன்று இங்கு வேறு நம்மை அசிங்கப்படுத்துகிறார்கள். எனக்கு 25 வயதாகப்போகிறது. நானா வேண்டாமென்கிறேன்? கிடைக்கமாட்டேங்குதேப்பா!

Monday, July 30, 2007

பெர்க்மன் காலமானார்.


உலகின் தலைசிறந்த திரைப்பட இயக்குனர்களில் ஒருவரான ஸ்விடன் நாட்டு இங்க்மார் பெர்க்மன் நேற்று காலமானார். குணா பாணியில் சொல்லவேண்டுமானால் "மனிதர் உணர்ந்து கொள்ள அவரது படங்கள் சாதாரனமானவையல்ல, அதையும் தாண்டி ஆழமானவை, அற்புதமானவை!". அதனால் அவரது பெரும்பாலான படங்களை நம்மால் ரசிக்கமுடியாது! அவரே "என் படங்களை நானே பார்க்கமுடியாதபடி சோகமயமாய் இருக்கின்றன!" என்று சமீபத்தில் சொன்னார்.

அவரது 'Wild Strawberries' படத்தை எல்லோரும் கட்டாயம் பார்க்கவேண்டும். அவரது படங்களிலேயே மிகவும் இலகுவான படம். சீட்டில் உட்காரவைத்தே ஒரு ரசிகனை நரக வேதனை அடையச்செய்ய இயக்குனரால் முடியமென்பதற்கு 'Cries and Whispers' பார்க்கவேண்டும். மற்ற பெரிய இயக்குனர்களைப்போல் இவரது படங்கள் இந்தியிலும் தமிழிலும் காப்பியடிக்கப்படவில்லை என்று நினைக்கிறேன். அந்தப் படங்களைப் புரிந்துகொள்ளும் திராணியே நம்மவர்க்கு இல்லை என்பதொரு காரணமாக இருக்கலாம்.

மேலும் இவரது படங்களில் நடித்த நடிகர்கள் தெய்வங்களென்று சொன்னால் தப்பில்லை. அசாத்திய திறமை வேண்டும். பெர்க்மன் அவர்களுக்கு திரைக்கதை, வசனமெல்லாம் கொடுக்கமாட்டார். கதையில் அந்த பகுதியில் என்ன நடக்கவேண்டுமென்று சொல்லுவார். மற்றதை அவர்களே பார்த்துக்கொள்ள வேண்டியதுதான்!

தமிழகத்தில் பென்குயின்கள்!

ரவி அவர்கள் சுட்டிக்காட்டிய திரைப்படக் காட்சி கிழே! இது பற்றிய எனது முந்தைய பதிவு இங்கே.

Thursday, July 19, 2007

கொஞ்ச நாள் பொறு தலைவா...

... அந்த அலாஸ்கா வஞ்சிக்கொடி தேடிவருவா! Greenpeace இயக்கத்தைச் சேர்ந்த ஜான் தனது நன்பர்களுடன் அலாஸ்காவின் பெர்ரிங் கடலில் ஆய்வு செய்துகொண்டிருக்கிறார். அக்குழுவினர் இங்கே அதைப்பற்றி பதிவெழுதுகிறார்கள். அவர்கள் கப்பலிலிருக்கும் வலைப்படக் கருவியின் நேரடி படங்கள் இங்கே. ம்...பொறாமையாக இருக்கிறது. ஆனால் இது சரி செய்யக்கூடியதுதான். வருகிற செப்டம்பரில் நானும் அலாஸ்கா சுற்றிப்பார்க்க செல்கிறேனாக்கும்!

என்னாது?!! நீங்க Greenpeace உறுப்பினர் இல்லையா?!

Monday, July 16, 2007

சிவாஜியை விஞ்சிய படம்!


சிவாஜிதான் கடந்த பல வருடங்களில் நான் பார்த்த மிகமட்டமான படமென்று நினைத்திருந்தேன். அந்த 'சாதனை' ஒரே வாரத்தில் முறிந்துவிட்டது. இந்த Transformers ஐவிட மட்டமான படத்தை ஈரேழு பதினான்கு உலகங்களிலும் அண்டம் அழியும்வரை யாராலும் உருவாக்கமுடியாது. மேகன் பாக்ஸை மட்டும் கொஞ்சம் ரசிக்கலாம்!

சிவாஜியையாவது திருட்டு டிவிடியில் பார்த்ததில் நேரம் மட்டும்தான் விரயம். இந்த இழவை நேற்றிரவு திரையரங்கில் பார்க்கப்போய் பாதியில் தலைதெரிக்க ஓடிவந்ததில் நேரம், பணம், தூக்கம் எல்லாம் போச்சு! இனி ஹாலிவுட், பாலிவுட், கோலிவுட் படங்களை முற்றிலுமாகத் தலைமுழுகிவிடலாமா என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன். Au Revoir Les Enfants, Leben der Anderen, Das மாதிரி படங்களைப் பார்த்து திருந்துங்களேன்பா.

பி.கு: அதற்கு முந்தைய இரவு ஹாரி பாட்டர் பார்த்தேன். பரவாயில்லை. பார்க்கலாம்.

Saturday, July 14, 2007

எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு!

நீங்கள் ஏற்கனவே தெரிந்துகொண்டிருக்கலாம். ஆனாலும் திறந்தமூல மென்பொருளாக்கத்தில் வியத்தகு முன்னேற்றங்கள் வருவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. கோபுண்டு, ஜி-புத்துணர்ச்சி (gNewSense), ஏவுதளம் (Launchpad) ஆகியவை அடுத்தடுத்து ஆரம்பித்துள்ளன. ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டதாகப் பாடும் காலம் வெகு தொலைவில் இல்லை. இந்த gHurd யும் மறந்துவிடாதீர்கள்.

தம்பட்டம் ...

இந்த வார outlook இதழில் தென்னிந்தியாவை எக்கச்சக்கமாகப் புகழ்ந்திருக்கிறார்கள். இது மாதிரியான கட்டுரைகளைப் படித்து பெருமைபட்டுக்கொள்ளலாம். ஆனால் இவ்வளவு கொடுத்துவைத்திருக்கும் நாம் அதனை சரிவர பயன்படுத்தி மேலும் முன்னேறுகிறோமா என்பது யோசிக்கவேண்டிய விசயம்.

Tuesday, July 10, 2007

அனுராதா, என் தேவதையே!

பூனைக்கு மணி கட்டுவது யாரு? அதாவது ரஜினி, தமிழ் சினிமாவின் மிகப்பெரும் வெட்கக்கேடு என்னும் உன்மையை யார் எடுத்துச் சொல்வது? தமிழனின் கண்மூடித்தனமான சினிமா வெறியில் பணம் செய்து திண்றுகொண்டிருக்கும் உதவாக்கரைகள் ரஜினி, சங்கர் போன்றோரை யார் தோலுரித்துக்காட்டுவது? இதை செவ்வனே செய்த அனுராதாவுக்கு (பகுதி 1, பகுதி 2) எனது மனமார்ந்த பாராட்டுக்கள்!

அனுராதா சொல்வதுபோல் ரஜினி என்ற மனிதன் நல்லவராக இருக்கலாம். இல்லாவிட்டாலும் (புகைக்கு அடிமையானவர் ஆன்மீகவாதியாம்!) அதைப்பற்றி நமக்குக் கவலையில்லை. ஆனால் நடிகனாக அவர் விமர்சனத்திற்கு உரியவரே. சிவாஜிராவும், (pre 1990) ரஜினிகாந்தும் ஜெயித்துவிட்டார்கள். சூப்பர் ஸ்டார் அசிங்கமாகத் தோற்றதோடு மட்டுமில்லாமல் தனது சாக்கடை உலகத்து தமிழ் சினிமாவையும் இழுத்துச் சென்றிருக்கிறார். என்று தணியும் இந்த கேவல மோகம்?

கூரையுள்ள இடத்தில் குளிக்கவும்...

ஸ்லேஷ்டாட் தளத்தில் சீன நீர்மூழ்கிக் கப்பல் கூகுள் வரைப்படத்தில் தெரிவது குறித்த இந்த பதிவு பற்றி விவாதம் நடக்கிறது. அதில் வடகொரிய வான் தாக்குதலை தவிர்க்க அமெரிக்க/தென்கொரிய கட்டிடம் ஒன்று தரை நிறத்தில் வண்ணம் தீட்டப்பட்டிருப்பதை ஒருவர் சுட்டிக்காட்டினார். ஏதேதோ கூகுளில் தெரிகிறது. குளிக்கப் போகும்போது கவனமிருக்கட்டும்!

Saturday, July 07, 2007

ஹே யூ!

உலகெங்கும் இன்று (07/07/07) நடக்கும் லைவ் எர்த் கச்சேரிகளுக்கு எனது வாழ்த்துக்கள். கச்சேரிகளை நேரடியாகக் காண இங்கே செல்லவும். (IE உலாவி கேட்கும் அத்தளத்திற்காக வருந்துகிறேன்).

Thursday, July 05, 2007

சீனி கம், தரம் அதிகம்!



நேற்று சீனி கம் (சக்கரை குறைவு) பார்த்தேன். நல்ல படம். அமிதாப் பச்சனை வெறுக்கும் நான் கூட படத்தை ரசிக்க முடிந்தது. ரஜினி, அமிதாப், சிரஞ்சீவி போன்ற தாத்தாக்கள், இந்த மாதிரி படங்களில் மட்டும் நடித்தால் புண்ணியமாய்ப் போகும். தபுவைப் பற்றி சொல்லத் தேவையில்லை. கலக்கியிருக்கிறார்.

இளையராஜாவின் நான்கு பழைய பாடல்களை குறிப்பாக 'மன்றம் வந்த தென்றலை' வேறொரு காட்சியில் பார்ப்பது சுகம். ராஜா பாடாவதி படங்களுக்கு பாடாவதி இசையமைத்து மேலும் பெயரைக் கெடுத்துக்கொள்ளாமல் இதே பாணியை பின்பற்றலாம். புதிய இயக்குனர் பாலகிருட்டினன் வெற்றிபெற வாழ்த்துக்கள்.

சுதந்திர தின 'டபுள் தமாக்காவாக' ராட்டடூயீ என்கிற இயக்கமூட்டிய படத்தையும் பார்த்தேன். சுமாரான படம்தான்.

Wednesday, July 04, 2007

பன்னிங்க தான்டா...

ராஜ்தீப் சார், நம்ம அனுராதாவுக்கு ஒரு கெத்தான சம்பள உயர்வு கொடுங்க. இது விமர்சனம்!!! நான் சிவாஜி படம் பார்க்கவில்லை. பார்க்கப் போவதுமில்லை! ம்...பச்சை கலர் சூட்டு, "ஏம்மா என்னை கருப்பா பெத்தீங்க..." மாதிரி நகைச்சுவை, 'அணா' காலத்து ஒரு ரூபாய் ஸ்டண்டு. இந்தக் கொடுமையை தீயேட்டரில் வேற போய் பார்க்கனுமா? ஆனா இந்த டைலாக்கை இப்படி சொன்னா ரசிக்கலாம்...

"பன்னிங்க தான்டா கூட்டமா போய் ரஜினி படம் பார்க்கும்!
நான் சிங்கம்டா, பொறுத்திருந்து தசாவதாரம் பார்ப்பேன்டா!!"

பி.கு: நீங்களும் போய் சிவாஜி பார்த்திருந்தால், தவறாக எடுத்துக் கொள்ளவேண்டாம்.

07/07/07 அன்று நிலவரம்:

யப்பா....திருட்டு டிவிடியில் (கூகுள்) பாதி படம் பார்த்தேன். IQ வில் பாதி குறைந்துவிட்டது!! மீதியையாவது காப்பாற்றிக்கொள்ளப் பார்க்கிறேன்.