Sunday, January 27, 2008

கிழங்கட்டைகள் மாநாடு - 1921 - பகுதி 2

முதல் பகுதி இங்கே.

மறைமலை அடிகள்: அதுல என்ன பிரச்சனைன்னா, தமிழுல சமசுகிரத வார்த்தைகளோட கலப்புனால தமிழே அழிஞ்சுண்டு வருது. நான் வடமொழி எழுத்துக்களைத் தவிர்த்து முடிந்தவரை தமிழ் எழுத்துக்களையும், முக்கியமா தமிழ் வார்த்தைங்களையும் பயன்படுத்தனும்னு ரொம்ப நாளா சொல்லிண்டுவரேன்.

வீரமாமுனிவர் (Fr. Beschi) என்கிற பாதிரியார், எப்பவோ ஆரம்பிச்ச பணி இன்னும் முடியவேயில்ல. இது முடியற வேலையும் இல்ல. பிற மொழிகள்லேர்ந்து புதுசு புதுசா சொற்கள் வந்துட்டேதான் இருக்கும். நாமலும் விடாம அதையெல்லாம் தமிழ் ஆக்கிட்டேதான் இருக்கனும்.

கிழடு 1: (மனதுக்குள்) ஐய்யய்யோ! இன்னிக்கு நம்மை ஆத்துக்கு அனுப்புவாளா மாட்டாளா? வார்த்தைகள் வந்துண்டேயிருக்கும்னா என்ன ... குமாஸ்தா கொண்டுவருவாரா? நான் மூக்குக்கண்ணாடி கூட கொண்டுவரலியே! எப்படி படிக்கிறது. எப்படி மாத்தறது?

மறைமலை அடிகள்: (சலசலப்புகளை கவனிக்காமல்...) இன்னிக்கு நாம கூடியிருக்கறது தமிழ் மாதப் பெயர்கள், ஆண்டுப் பெயர்கள், ஓரைப் பெயர்கள்... இவையெல்லாத்துலயும் இருக்குற வடமொழிப் பெயர்களுக்கு மாற்றா நல்ல தமிழ்ப்பெயர் கண்டுபிடிக்கத்தான். அதோட இயேசு கிருசுதவர் பெயரில் ஆங்கிலேயர்கள் வைத்திருக்கும் ஆண்டுக் கணக்குபோல நாமும் தமிழுக்காக திருவள்ளுவர் ஆண்டு உருவாக்கலாமான்னு ஆலோசித்து முடிவுசெய்யலாம். இப்ப நீங்க உங்களோட கருத்துகள சொல்லுங்க.

கிழடு 2: அட என்ன அடிகளாரே இப்படி சொல்லீட்டிங்க? நாம பயன்படுத்தற நட்ஷத்திரம், வருஷம், மாசப் பேரெல்லாம் ஆரியர்கள் நம்ம மேலத் திணிச்சதுதானே?! இந்த காலண்டர் எல்லாத்தையுமே தூக்கிக் கடாசிட்டு நாம புதுசா எதாவது கண்டுபிடிக்கனும். பல ஆயிரம் ஆண்டுகளாய் மணி, நாள் பார்க்கக்கூட இன்னொருத்தனுக்கு கைக்கட்டி நின்ன நிலைமை ஒழியனும்.

கிழடு 1: (மனதுக்குள்) பகவானே! காலண்டர் கண்டுபிடிக்கனுமா?!! (வாய்விட்டு) அட என்ன ஓய் சொல்றீர்? இதெல்லாம் எங்களவா கொண்டுவந்ததுன்னா, இங்கே இருந்தவா யூஸ் பண்ணின காலண்டரெல்லாம் எங்கப் போச்சு? அதைக் கண்டுபிடிச்சு மாத்திட்டா போறது. என்னமோ தமிழா காலண்டரெல்லாம் கிடைக்கவே கிடைக்காதுங்கற மாதிரி அபசகுனமா பேசுறீரே?

கிழடு 2: யோவ்! நீயென்னய்யா வெளக்கென்ன மாதிரி பேசிகிட்டு? ஆதிதமிழன் எப்படியா காலண்டரெல்லாம் கண்டுபிடிச்சிருப்பான்? அவனே வேட்டையாடினோமா, மீன் பிடிச்சோமா, விவசாயம் செஞ்சோமா, கல்லு நட்டு கும்மிட்டோமான்னு இருந்தான். இந்த காலண்டர் கீலண்டரெல்லாம் கண்டுபிடிக்க அவனுக்கென்ன உம்மமாதிரி உட்காந்த எடத்துல மாட்டுக்கறி தட்சனையா கிடைச்சது?

கிழடு 1: அபச்சாரம் அபச்சாரம்! நாங்கல்லாம் மாமிசம் சாப்பிடறவாயில்ல. பசு காமதேணு! தப்பா பேசாதேள். அதை விடும். காலண்டரேயில்லன்னா எப்படி ஓய் உங்களவா அறுவடை நாளெல்லாம் எண்ணியிருப்பா?

கிழடு 2: (யோசிக்கிறார்...) ம்... அது எவனாவது நல்ல பையனா புடிச்சு ஒரு மரத்துல வவ்வாலு மாதிரி தொங்க விட்டுடுவாங்கப்பா. அவன் வேலையே பொழுது விடிஞ்சா மரத்துல பிராண்டி கோடு போடறதுதான். அப்படியே நாள எண்ணிடலாமில்ல?

கிழடு 1: நீங்க சொல்றது வாஸ்தவம்தான்! ஆனா இந்தகாலத்துல அப்படி பொறுப்பா கோடு போட மனுஷா கிடைப்பாளா ஓய்?

கிழடு 2: (மீண்டும் யோசிக்கிறார் ...) பாண்டிச்சேரில சுப்புன்னு ஒரு பையன் இருக்கான். தமிழ்ன்னா அவனுக்கு வெறி. பாரதிதாசன்னு பேரெல்லாம் மாத்திக்கிட்டான். தை மாசந்தான் தமிழ்ப் புத்தாண்டுன்னு பாட்டெல்லாம் பாடியிருக்கான். அவன வேணும்னா கேட்டுப்பாக்கலாம், தொங்கறியாடான்னு...

மறைமலை அடிகள்: யோவ்! உங்களையெல்லாம் எவன்ய்யா தமிழறஞருன்னு அறிவிச்சான்? அசிங்கமா அரசியல் பேசிட்டு இருக்கீங்க. விவரம் தெரியலன்னா ஒரு ஓரமா உட்காந்து கதை கேளுங்க. கன்னாபின்னான்னு உளறி இங்க வந்திருக்கிற பெரிய மனுசங்க பேரைக் கெடுக்காதிங்க.

தொடரும் ...

6 comments:

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

பாலாஜி - இந்த முழுத் தொடரின் நடையையும் அது புகுத்தும் செய்தியையும் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

ஒட்டுமொத்தத் தமிழறிஞர் குழாமையும் இப்படி ஓட்டுவது உவப்பாக இல்லை. அவர்கள் சொன்ன கருத்து தவறு என்று சொல்லி விட்டீர்கள். அதுவே போதுமானது. அதற்கு மேல், நகைச்சுவை என்ற பெயரில், இப்படி மரியாதைக் குறைவு செய்வதற்குத் தேவை இருப்பதாய் தெரியவில்லை.

.நிகழ் காலத்தில் வாழ்பவர்களை நையாண்டி நடையில் எழுதுவது வேறு. வாழ்ந்து மறைந்தவர்களை அப்படி எழுதுவது வேறு. உங்களின் இந்த நடை அவர்கள் மேல் மதிப்பு வைத்திருப்பவர்கள் மனதைப் புண்படுத்தும் என்பதால், நீங்கள் எடுத்துரைக்கும் உண்மைகளைத் திறந்த மனதுடன் அணுகுவதற்கான வாய்ப்பு குறையும்.

மறைமலை அடிகள் "வந்துண்டு, அழிஞ்சுண்டு" என்ற தமிழில் தான் பேசினார் என்று ஆதாரம் ஏதும் இருந்தால் தெரிவியுங்கள். இல்லாவிட்டால், இந்தப் பேச்சு நடையைத் திணித்து எழுதாதீர்கள்.
அக்காலத்தில் நிலவி வந்த மணிப்பிரவாள நடைக்குள் நீங்கள் ஒளிந்து கொள்ளப்பார்க்கலாம். ஆனால், தனித்தமிழ் முன்னோடியும் அறிஞருமான மறைமலை அடிகளும் இப்படி பேசி இருப்பார்கள் என்று என்ன ஆதாரம்?

//அவனே வேட்டையாடினோமா, மீன் பிடிச்சோமா, விவசாயம் செஞ்சோமா, கல்லு நட்டு கும்மிட்டோமான்னு இருந்தான். இந்த காலண்டர் கீலண்டரெல்லாம் கண்டுபிடிக்க அவனுக்கென்ன உம்மமாதிரி உட்காந்த எடத்துல மாட்டுக்கறி தட்சனையா கிடைச்சது?//

வன்மையாக கண்டிக்கத்தக்கது. பழந்தமிழரின் வரலாற்று, அறிவியல் நோக்கு குறித்து விமர்சிக்கும் நீங்கள் அது குறித்த தரவுகளை ஆதாரப்பூர்வமாக எழுதினால் வரவேற்பேன். இப்படி நையாண்டி நாடகத்தில் சேற்றை இறைக்கத் தேவை இல்லை.

திருவள்ளுவர் ஆண்டு மடமை, திருக்குறளும் இன்னும் சில பழந்தமிழ் ஆக்கங்களும் கி.மு-வில் தோன்றி இருக்க வாய்ப்பே இல்லை என்று தொடர்ந்து ஒரு கருத்தைத் தெரிவித்து வருகிறீர்கள். தயவுசெய்து இது குறித்து ஆதாரப்பூர்வமாக வாதங்களை முன்வையுங்கள். பல மொழியியல் அறிஞர்கள் நூற்றாண்டு காலம் அறிவாலும் ஆய்வாலும் தெளிந்து சொன்னவற்றைப் புறந்தள்ளி யோசிக்க வலுவான ஆதாரங்கள் தேவை.

நீங்கள் சொல்லவருவதை நேரடியாக கட்டுரை நடையில் சொன்னால் நலம். மற்றவை எல்லாம் உங்கள் கோபம், வெறுப்பு, எள்ளலை வெளிப்படுத்தவே உதவும்.

அன்புடன்,
ரவி

Balaji Chitra Ganesan said...

நையாண்டியால் தமிழறிஞர்களுக்கு இழுக்கு என்று நான் கருதவில்லை.

மலைமறை அடிகள் அரசியல்வாதி மாதிரி பேசியிருப்பார் என்று நான் நினைக்கவில்லை. அதற்காக நான் எழுதும் நையாண்டி பாணியில் பேசியிருப்பார் என்று சொல்லவரவில்லை. முடிந்தவரை கிரந்தக எழுத்துக்களைக் கலைந்தே அவரது வசனங்களை எழுதிவருகிறேன்.

வந்துண்டு (வந்து கொண்டு), அழிஞ்சுண்டு (அழிந்து கொண்டு) எப்படி மணிப்பிரவளம் ஆயிற்று? மணிப்பிரவளம் என்பது சமசுகிரத வார்த்தைகளை கிரந்த எழுத்துகளிலும், தமிழ் வார்த்தைகளை '247' தமிழ் எழுத்துகளிலும் கலந்து எழுதும் முறை.

நான் வேன்டுமென்று நினைத்தால்கூட என்னால் மணிப்பிரவளத்தில் எழுதமுடியாது. மணிப்பிரவளம் எப்படி இருந்திருக்குமென்று தமிலங்கிலத்தில் வேண்டுமானால் உதாரண்ம் தருகிறேன்.

"நான் Bus stopபுல நின்னுட்டிருக்கும் போது அந்த accident நடந்துச்சு."

பழந்தமிழ்நாடு குறிஞ்சி (வேட்டை), முல்லை (ஆநிரை மேய்த்தல்), மருதம் (விவசாயம்), நெய்தல் (மீன் பிடித்தல்) மற்றும் பாலை (பயணம், களவு) என்னும் நிலப்பகுப்புகளை கொண்டிருந்தது சங்கப் பாடல்களிலிருந்து நமக்குத் தெரிகிறது. இவ்வொன்றிற்கும் முருகன், திருமால், இந்திரன், வருணன், கொற்றவை என்னும் தெய்வங்கள் ஏற்பட்டன.

ஆனால் தமிழனின் மிகப்புராதன வழிபாடு 'நடுகல் வணக்கமே'. மறைந்த வீரர்களின் நினைவிடத்தில் கல் நட்டு அதை வழிபடுவது தமிழர் பண்பாடு. அத்தகைய கல் வழிபாடு தனியாகவும், நீத்தார் வழிபாடாகவும் இன்றுவரை தொடர்கிறது.

வேதமதத்து லிங்க (ஆண், பெண் குறிகள்) வழிபாடும், ஆதிதமிழரின் 'சேயோன்' என்னும் வீரனின் நடுகல் வழிபாடும் சேர்ந்தே இன்று சிவலிங்க வழிபாடு ஆகியது.

அதேபோல வேதகாலத்தில் மாடுகளை தெய்வங்களுக்குப் படையலாக யாகத்தில் போடுவது வழக்கம். அந்த யாகங்களை செய்த பிராமின், அக்னிஹோத்திரி உள்ளிட்ட பதவிகளை வகித்த பூசாரிகள் மாட்டுக்கறியை உண்டது இயல்பே. வேதமதத்தினர் பிற்காலத்தில் ஊண் உணவைத் தவிர்த்தது சிரமண மதங்களிடமிருந்து கற்றுக்கொண்ட நல்ல பழக்கம்.

திருவள்ளுவர் ஆண்டு ஏன்மடமை என்று பிரிதொரு பக்கத்தில் விலாவரியாக எழுதிவிட்டேன். சமணர்கள் கிமு. 2500 ஆண்டிலிருந்து கி.பி. 700 வரை தமிழ்நாட்டில் தொந்தரவு ஏதுமின்றி இருந்திருக்கலாம். திருவள்ளுவர் கி.மு. 2500லிருந்து கி.பி. 300 வரை எப்போது வேண்டுமானாலும் வாழ்த்திருக்கலாம்.

தமிழ் வட்டெழுத்து முறைமை வந்தபின்புதான் தொல்காப்ப்யியம் எழுதிருக்கக்கூடிய வாய்ப்பிருக்கிறது. தொல்லியல்/எழுத்து ஆராய்சியாளர்கள் வட்டெழுத்து முறை சுமார் கி.பி. 200 வாக்கில்தான் வந்திருக்கும் என்று கருதுகிறார்கள்.

இத்தகைய புதிய விசயங்களைத் தெரிந்துகொள்ள வாய்ப்பில்லாத அந்த கால தமிழறிஞர்கள் தொல்காப்பியம், திருக்குறள் ஆகியவற்றிற்கு வழங்கிய ஆண்டுகள் தவறாக இருக்கவே வாய்ப்புண்டு.

திருவள்ளுவர் எப்போது இருந்திருப்பார் என்பதை இன்று நம்க்கு உள்ள தொழில்நுட்பங்களின் உதவிகொண்டுகூட சரியாகக் கணிக்கமுடியாது. அப்படியிருக்க சும்மா ஊகித்து அறிந்த ஆண்டை தமிழர் நாட்காட்டிக்கு வழங்கவேண்டும் என்று சிபாரிசு செய்த அந்த 'தமிழறிஞர்களின்' ஆணவம் கண்டிக்கத்தக்கது. நமக்குத் தெரியாத ஒன்றை தெரியாது என்று ஒத்துக்கொள்வதில் இழுக்கு ஒன்றுமில்லை.

அதே சமயத்தில் அந்த 1921 சிபாரிசு "எங்களின் பட்டறிவுக்கு உட்பட்டு நாங்கள் செய்தது" என்று கி.ஆ.பெ.விசுவநாதம் தெரிவித்து இருக்கிறார். 1971 ஆம் ஆண்டிலும், 2008 ஆம் ஆண்டிலும் அந்த சிபாரிசுகளை அப்படியே ஏற்றுக்கொள்ள எந்த முகாந்திர்முமில்லை.

Balaji Chitra Ganesan said...

ஆதிதமிழன் காலண்டர் கண்டுபிடிக்கவில்லை என்று 'கிழடு 2' சொல்வது பெரும்பாலான தமிழரிடம் இன்றும் இருக்கும் தவறான என்னமே. அடுத்த பகுதியில் மறைமலை அடிகள் அதை விளக்குவார்!

Balaji Chitra Ganesan said...

ஊப்ஸ்! மலைமமறை, கிரந்தக, என்னமே மாதிரியான பிழைகளுக்காக வருந்துகிறேன்.

ஓகை said...

பாலாஜி,

ரவி சங்கரின் கருத்துகள நான் ஆமோதிக்கிறேன் - உங்கள் விளக்கங்களுக்குப் பிறகும். இந்த இரண்டு பதிவுகளிலும் நகைச்சுவை ஏதும் இருப்பதாக தெரியவில்லை. மாறாக நாகரிகக் குறைவு இருப்பதாக நான் கருதுகிறேன். அங்கதம் என்பது மிகவும் அருமையானது. ஆனால் உங்கள் பதிவை அவ்வாறு என்னால் கருத முடியவில்லை.

உங்கள் நண்பர்களைக் கேட்டுப் பாருங்கள் இந்த பதிவுகள் நகைச்சுவையானவைகளா என்று. ஆமெனில் தொடருங்கள். அன்றெனில் தயவு செய்து நிறுத்திவிடுங்கள்.

1921ல் நடந்த விவாத விவரங்களை எங்கு, எப்படி அறிந்து கொள்வது என யாரவது தெரிய படுத்தினால் நலம்.

Balaji Chitra Ganesan said...

>> மாறாக நாகரிகக் குறைவு இருப்பதாக நான் கருதுகிறேன்.

எது நாகரீகக் குறைவு?

>> அங்கதம் என்பது மிகவும் அருமையானது. ஆனால் உங்கள் பதிவை அவ்வாறு என்னால் கருத முடியவில்லை.

ஹலோ? நான் என்ன பெரிய எழுத்தாளனா? என்னுடைய 'நையாண்டி' சிரிக்க, சிந்திக்க வைக்கவில்லை என்றால் நான் மேலும் முயலவேண்டுமேயொழிய நிறுத்திவிடக்கூடாது.

மற்றபடி ஒருவர் கருத்தை விமர்சிக்காமல் "நீ வேற மாதிரி எழுதேன்" என்று சொல்வது எனக்கு சரியாகப் படவில்லை. மேலும் இரு பக்கங்கள் இருக்கும் ஒரு விசயத்தை எழுதும்போது, கேள்வி-பதில், உரையாடல் போன்ற பாணிகள் எப்போதுமே நன்மை பயக்கும்.