Tuesday, July 22, 2008

ஆத்தா, நான் ஜெயிச்சுட்டேன்!!

மன்மோகன் சிங் நமக்கு செய்யும் சேவைக்கான கட்டணம் (ஒரு எம்.பி.) தலைக்கு 3 கோடியாம்!

Saturday, July 12, 2008

நீரேற்றம்!

குவாண்டானமோ பே உள்ளிட்ட இடங்களில் சட்டத்திற்கு அப்பாற்பட்டு சிறை வைக்கப்பட்டிருக்கும் இஸ்லாமிய தீவிரவாதிகளை (மற்றும் சும்மா மாட்டிக்கொண்டவர்களை) அமெரிக்க ராணுவத்தினர் waterboarding என்னும் சித்ரவதைக்கு ஆளாக்குவது நாம் அறிந்ததே. ஆனால் இந்த 'நீரேற்ற' முறை சித்ரவதை இல்லை என்று அமெரிக்கா கூறி வருகிறது.

புகழ்பெற்ற (ஆப்ராமிய) நாத்திக பேச்சாளர் கிறிஸ்தபர் ஹிட்சன்ஸ், தானே இந்த கொடுமையை அனுபவித்து, அது பற்றி Vanity Fair பத்திரிக்கையில் எழுதியிருக்கிறார். கீழுள்ள ஒளித்துண்டையும் பார்க்கவும்.

Tuesday, July 08, 2008

தனியொருவனுக்கு உணவில்லையெனில் ...

உலகத் தலைவர்கள் எல்லோரும் வயிறு முட்ட சாப்பிடுவோம்! ஜப்பானில் கூடியிருக்கும் ஜி-8 நாடுகளின் தலைவர்கள், மன்மோகன் சிங் உள்ளிட்ட வேறு ஐந்து நாடுகளின் தலைவர்கள் ஆகியோர், உலக உணவுப் பற்றாக்குறை, உலக வெம்மை போன்ற விசயங்களை விவாதிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களின் நேற்றைய உணவுப் பட்டியல் கீழே!


18 வகையான பண்டங்களை, அதுவும் அசைவ உணவு. பால் உள்ளிட்ட இயற்கைக்குப் புறம்பான, ஈவிறக்கமற்ற உணவுகளை பதம் பார்த்துவிட்டு இவர்கள் என்ன விவாதிக்கப் போகிறார்கள்? இந்த தலைவர்களின் வீண் ஆடம்பரம் எதற்காக? இவர்களெல்லாம் மக்கள் பிரதிநிதிகளாகத்தானே இங்கு கூடியிருக்கிறார்கள்?

மரக்கறி (உருளை, வெங்காயம், கேரட்...) தவிர்த்த காய்கறிகள், பழங்கள், அரிசி உள்ளிட்ட தாணியங்கள் ஆகியவை கொண்டே மனிதன் திடமாக, ஆரோக்கியமாக வாழமுடியும். ஒரு ஆடோ, கோழியோ தன் வாழ்நாள் முழுதும் சாப்பிட்ட உணவுக்கு ஈடானதை ஒவ்வொரு உணவு வேலையிலும் மனிதன் சாப்பிட்டால், இந்த பூமி தாங்குமா?

படம், செயதி நன்றி: டெய்லி மெயில். ஹஃப்பிங்டன் போஸ்ட்.

Sunday, July 06, 2008

தமிழில் பழுப்புப் புதினங்கள் (Pulp Fiction)

இந்து நாளிதழில் இன்று வெளியான பழுப்புப் புதினங்கள் பற்றிய கட்டுரை படிக்கத்தகுந்தது. முதலில் Pulp Fiction என்பது மட்டரக தாளில் பிரசுரிக்கப்பட்டு மலிவுவிலையில் விற்கப்படும் மசாலா புதினங்களைக் குறிக்கும் என்பதே இதைப் படித்துதான் எனக்குத் தெரிந்தது.

தமிழ் நாட்டுப் பொட்டிக்கடைகளில் சக்கைப்போடு போடும் ராஜேஷ் குமார் போன்றோரின் புதினங்கள் இவ்வகையைச் சார்ந்தவை. தமிழில் இவைகளுக்கு ஏற்கனவே எதாவது பெயரிருக்கிறதா என்று தெரியவில்லை. சாணித் தாள் புதினம் என்று அழைக்கலாமா? அந்தத் தாள்கள் பழுப்பாக இருப்பதாலும், பழுப்பு என்பது pulp என்பதோடு ஒத்தொலிப்பதாலும் 'பழுப்புப் புதினம்' நல்ல தமிழாக்கமாக இருக்குமென்று நினைக்கிறேன்.


நிற்க. தமிழ் பழுப்புப் புதினங்கள் மற்றும் சிறுகதைகளின் தொகுப்பு ஒன்று ஆங்கிலத்தில் பிரசுரிக்கப்பட்டிக்கிறது. இதை தொகுத்து வெளியிட்ட ப்ரீதம் சக்ரவர்த்தி, ராகேஷ் கன்னா ஆகியோருக்கு எனது பாராட்டுகள். அட்டைப்படத்துக்கு தனியாக ஒரு பாராட்டு :)

Saturday, July 05, 2008

ஊருக்கு நூறு பேர்

பழைய படம் தான். மக்களவை நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும் தொலைக்காட்சி அலைவரிசையில் இன்றிரவு ஊருக்கு நூறு பேர் திரையிட்டார்கள். சுமாரான படம். பார்க்கலாம்.

மரண தண்டனை எதிர்ப்பு, கம்யூனிசம் உள்ளிட்ட கருத்துகளை பற்றிய ஜெயகாந்தன் அவர்களின் கதை. தேசிய விருது வாங்கிய படம். கொஞ்சம் பிரசார நெடியடித்தாலும், நல்ல நடிப்பு, பாத்திரத்தேர்வு, வசனம் என்று சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

அந்த (?!) காலத்தில் தூர்தர்ஷன் மாநில மொழித்திரைப் படங்களைப் பார்த்ததை பலபேர் என்னிடம் சிலாகித்திருக்கிறார்கள். இப்போது மக்களவை தொலைக்காட்சி ஒவ்வொரு சனிக்கிழமையும் இரவு 9 மணிக்கு விருது பெற்ற படங்களை திரையிடுவதாகத் தெரிகிறது. சில மாதங்களுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட உலக திரைப்படங்கள் என்னும் அலைவரிசையில் கலக்கிக் கொண்டிருக்கிறார்கள். முடிந்தால் பாருங்கள்.

நீங்கள் தில்லியில் வசிப்பவராயின் ஓசியான் அமைப்பின் ஆசிய மற்றும் அரபு திரைப்படவிழாவில் (ஜுலை 10-20) கலந்துகொள்ளலாமே!

Thursday, June 19, 2008

தசாவதாரம் - அபாரம் பாதி, அபத்தம் மீதி!

கடவுள் இல்லை. அதுவும் ஆக்கலும் (creationist - transcendent), காத்தலும் (immanent - personal) ஒன்றாய் சேர்ந்த கடவுள் (monotheist God) சத்தியமாய் இல்லை என்று அற்புதமாய் சொல்லும் அல்லது சொல்ல நினைத்த படம் தசாவதாரம். கட்டாயம் பார்க்கலாம்.

தசாவதாரம் என்றால் என்ன? மக்கள் இயற்கையினாலும், பகைவர்களாலும் ஆபத்துக்கு உள்ளாகும் போது 'இறைவனான' விஷ்ணு அவதரித்து காப்பாற்றுவார் என்னும் நம்பிக்கையே தசாவதாரக் கதை. அந்த பத்து அவதாரங்களையும் இந்தப் படத்தில் அற்புதமாய் கொண்டு வந்திருக்கிறார்கள்.

(கீழ் வருவன அரூண் என்பவர் சுருமுரியில் எழுதியதிலிருந்து பெறப்பட்ட விளக்கம்.)
1. மச்சம் - ரங்கராஜ நம்பி - கடலோடு போவதால்.
2. கூர்மம் - அமெரிக்க அதிபர் புஷ். தேவருக்கும் அசுரருக்கும் சண்டை மூட்டியது போல் இன்று மேற்கத்தியருக்கும், இஸ்லாமியருக்கும் சண்டை மூட்டிவிடுதல்.
3. வராகம் - பாட்டி - ஒரு பாட்டில் அவரே பன்றியாக நடிக்கிறார்.
4. நரசிம்மம் - ஸிங்கன் நராஹாசி - பெயர், கைகளால் கொல்வதற்காக பயிற்சி.
5. வாமனன் - கலீபுல்லா - விஸ்வரூபம்.
6. பரசுராமன் - ஃபெலெட்சர் - கொலைகாரர்.
7. ராமன் - அவதார் சிங் - ஒரு தார மணம்.
8. பலராமன் - பலராம நாயுடு - பெயர், காவல் துறை.
9. கிருஷ்ணன் - பூவராகன் - திரெளபதியை (அசின்) காத்தது, பாண்டவர் (சகாக்கள்), தூது செல்வது, காலில் அம்பு பட்டு இறப்பது.
10. கல்கி - கோவிந்த் ராமசாமி - நிகழ்கால உலகத்தை காப்பவர்.
(நன்றி அரூண்.)

மச்சவதாரம் இந்திய கதைப்படி மட்டுமல்லாது, வரலாறு, அகழ்வாராய்சி மூலமாகவும் மிகப் பழமையான கதையே. வேதக் கதைகளில் மனுவைக் (Manu) காப்பாறும் மீனும், ஆப்ராமிய மதக்கதைகளில் வரும் நோவா (Noah of the river) கதையும் பழைமையானவை. பாண்டியரின் சின்னமும், பல ஆப்பிரிக்க நாட்டு சித்திரங்களும்், திருமாலில் உள்ள 'மா'வும், மீன் ஆதி காலத்திலிருந்து வணக்கப் படுவதை பறைசாற்றும். மற்றபடி மீன் சாப்பிட்டதால் அது கடவுள். பிராமணர்கள் பால், மாட்டுக்கறி சாப்பிட்டதால் அவர்களுக்கு காமதேணு கடவுள் என்று மிக எளிதே.

நிற்க. மீன் கதை மிகப்பழைமையானது என்பதற்கு ஏற்றார்போல, தசாவதாரம் படத்தின் முதல் பகுதி மட்டும் தனியே 12ஆம் நூற்றாண்டில் நடைபெறுகிறது. அதில் சைவரும், வைணவரும் அடித்துக்கொண்ட தமிழரின் அவமானகரமான வரலாற்றை சொன்னது ஓ போட வைத்தது. மற்றபடி காஞ்சி சங்கர மடத்தை கெடுத்த ஜயேந்திரர் உள்ளிட்ட பொறுக்கிகள், தீட்டு என்ற பெயரால் சாதியம் போற்றும் பிராமணர் (பூவராகன் உடலை கட்டிக்கொண்டு பாட்டி அழும்போது கூட வருபவர்), பிராமண பாஷை என்னும் பெயரில் வடமொழி கலப்பு (அசின் பேசுவது), முஸ்லீம்கள் என்றாலே அல்கொய்தா என்னும் அபாண்ட போலீஸ் நடைமுறை என்று பல பேரை சாத்தியிருக்கிறார்கள்.

ஆனால் இவையெல்லாம் கமல் கதை, திரைக்கதை எழுதும்போது இருந்த அசாத்திய திறமையின் வெளிப்பாடு. படம் எடுக்க ஆரம்பித்தவுடன் எல்லாம் குட்டிசுவராய் முடிந்திருக்கிறது. மிக மோசமான ஒப்பனையை (Makeup) மன்னிக்கவே முடியாது. பலராம நாயுடு மற்றும் ஒப்பனையில்லாமல் வரும் கோவிந்த், ரங்கராஜ நம்பி பாத்திரங்கள் தவிர பிற ஒப்பனைகள் படுகேவலம்.

போயும் போயும் ஹிமேஷ் ரேஷ்மய்யா என்னும் தரித்திரத்தை பிடித்து வந்து இசையமைக்க வேண்டிய அவசியமென்ன? சண்டைக்காட்சிகள் மகா-மோசம் என்றால், கணிப்பொறி சித்திரவேலைகள் (graphics) தயாரிப்பாளரிடம் காசு தீர்ந்துவிட்டதை பறைசாற்றுகின்றன. கே. எஸ். ரவிகுமார் எல்லாம் ரஜினியோடு சேர்ந்து அல்லக்கை மடமெடுப்பதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும்.

மொத்தத்தில் ஒரு அருமையான கதையை, கருத்தை எடுக்கும் அளவுக்கு தமிழ் திரைப்பட உலகம் இன்னும் வளரவில்லை என்பதை தசாவதாரம் நிரூபித்திருக்கிறது. கமல் திரைப்படங்களை விடுத்து, புதினம் (novel) எழுத ஆரம்பித்தால் தமிழுக்கு அபாரமான சேவை செய்யமுடியும்.

Tuesday, May 06, 2008

பர்மா துயரம்

பர்மாவின் ரங்கோன், இர்ராவாடி மாகாணங்களை நர்கிஸ் என்னும் புயல் தாக்கியதாலும், புயலினால் கரையோரப் பகுதிகளை கடல் கொண்டதினாலும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சுமார் 22000 பேர் இறந்துவிட்டதாக அறியப்படுகிறது. மேலும் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப் பட்டுள்ளார்கள். அவர்களுக்கு உதவுவது நமது கடமை. கேர் அமைப்பு மூலம் உங்களால் முடிந்த அளவு உதவலாம்.

இந்தியாவை சுற்றியுள்ள நாடுகளில் சீரழிவுகள் ஏற்படும்போது முன்னின்று உதவுவது இந்திய அரசின் அத்தியாய கடமை என்பது தில்லியில் உள்ள மரமண்டைகளுக்கு எப்போதுமே தோன்றுவதில்லை. வங்காள தேசம், பாகிஸ்தான் வசமுள்ள கஷ்மீர், இலங்கை, இந்தோனேசியா என்று சமீபத்தில் நடந்த பேரழிவுகளில் இந்தியாவின் உதவி மிகவும் சொர்ப்பமே.

உலக நாடுகள் பலவும் பர்மாவின் இராணுவ ஆட்சியை எதிர்ப்பதால் வரிந்து உதவ வரப்போவதில்லை. பர்மாவோடு ஓரளவு உறவு வைத்துள்ள பெரிய நாடுகளில் இந்தியாவும் ஒன்று. அதனால் நமது தார்மீகக் கடமை மேலும் அதிகம்.

Sunday, April 13, 2008

புத்தாண்டு வாழ்த்துகள்!

அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

Sunday, April 06, 2008

பாரதியின் கடிதங்கள்!

இந்து நாளிதழின் ஆசிரியருக்கு பாரதியார் எழுதிய கடிதங்களின் தொகுப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இங்கே படிக்கலாம்.

Friday, April 04, 2008

ஒகேணக்கல் பிரச்சனையில் தமிழரின் சிறுபிள்ளைத்தனம்!

ம்... என்னை தமிழ் விரோதி என்று கட்டம் கட்டுபவர்கள் இதையும் படியுங்கள்.

1. பெங்களூரில் சில திரையரங்குகளை சில முட்டாள்கள் தாக்கினார்கள் என்றால் அதற்கெல்லாம் தமிழ் திரைத்துறையினர் உண்ணாவிரதம் இருக்கவேண்டுமா? இவர்களுக்கு வேறு வேலையே இல்லையா?
2. எதோ தென்னிந்திய திரைத்துறையினர் சங்கம் என்று ஒன்று இருக்கிறதாம். அதிலிருந்து கர்நாடக மாநிலத்தவரை இடைநீக்கம் செய்துவிட்டார்கள். நாம் மற்றவர்களை இனவெறியர் என்று சொல்லிக்கொள்கிறோம்! விந்தை.
3. கன்னடர்களின் உணவகங்கள் தாக்கப்படுவது, கர்நாடக பேருந்துகள் தாக்கப்படுவது என்று மிகவும் கேவலமாக நிலைக்கு தமிழகம் ஏன் சென்று கொண்டிருக்கிறது? இதையெல்லாம் கண்டிப்பது மற்ற தமிழரின் கடமையல்லவா?
4. பாலாற்றின் குறுக்கே ஆந்திரம் அணை கட்டக்கூடாது என்று தமிழக கட்சிகள் போராடவில்லையா? அதேபோல சில கன்னட அமைப்புகள் போராடினால் போராடிக்கொள்ளட்டுமே. கடைசியில் அரசுகளும், நீதிமன்றங்களும் தீர்க்க வேண்டிய பிரச்சனைகளுக்கு எதற்கு பொதுமக்கள் அலட்டிக்கொள்ளவேண்டும்?
5. பாலக்காடு தொடர்வண்டி மண்டலத்தை பிரித்தே ஆகவேண்டும் என்று அடம்பிடித்த நாம் 'விட்டுக்கொடுத்தல்' பற்றி மற்றவர்களுக்கு பாடம் நடத்தமுடியுமா?
6. கருணாநிதி என்கிற கிழவன் தேவையில்லாமல் எரிந்துவிழுந்து தமிழ்நாட்டுக்கு குந்தகம் விளைவித்து வருவதை பத்திரிக்கைகள் ஏன் கண்டுகொள்வதில்லை? இராமர் பற்றி தேவையில்லாமல் பேசி சேது சமுத்திரத் திட்டத்தைக் கெடுத்தது யார்? ஒகேணக்கல் பற்றி ஒரு சென்னை விழாவில் குடிகாரன் மாதிரி பேசி கன்னடர்களை கிழப்பிவிட்டது யார்?

Monday, March 31, 2008

கிழக்கே போகும் சனநாயகம்!

ம்... தொடர்ந்து ஈழம் பற்றி எழுதிக் கொண்டிருக்கிறேனோ? பிரபாகரனை அழிப்பதில் வருகிற மே 10 கிழக்கு மாகாணத் தேர்தல் முக்கியப் பங்கு வகிக்கப் போகிறது என்பதில் சந்தேகமில்லை. நான் போன வார இடுகையின் பின்னூட்டப் பக்கத்தில் குறிப்பிட்டது போல, விடுதலைப் புலிகளுக்கு சாவு மணி அடித்தாகிவிட்டது. அதன் ஓலம் தமிழகத்திலும் ஒலிக்கிறது. விடுதலைச் சிறுத்தைகள், பாட்டாளி மக்கள் கட்சி ஆகியவை தெரிந்தோ தெரியாமலோ புலிகளுடன் சேர்ந்து ஈழத்தமிழருக்கு நல்லது நடந்துவிடக்கூடாது என்பதில் தீவிரமாயிருக்கின்றன. என்ன நடக்கிறதென்று பார்ப்போம்.

வருகிற தேர்தல்கள் குறித்து இன்றைய இந்து நாளிதழ் தலையங்கம் இங்கே. விடுதலைப் புலிகளின் எடுபுடிகளான தமிழ் தேசிய கூட்டனி தவிர்த்த எல்லா கட்சிகளும் தேர்தலில் போட்டியிடுகின்றன. இழக்கு மாகாணத் தமிழரும், இந்தியா மற்றும் உலகத் தமிழர் அனைவரும் சேர்ந்து ஒரே அடியாக புலிகளைத் தலைமுழுக வாய்ப்பு கிடைத்துள்ளது. தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி (கருணா, பிள்ளையன்), முக்கட்சி கூட்டனி (PLOTE, அனந்தசங்கரியின் TULF, EPRLF-Padmanaba Wing) மற்றும் டக்ளஸ் தேவானந்தாவின் EPDP ஆகியவற்றுக்கு எனது ஆதரவும் வாழ்த்துகளும்!

விவரம் புரியாதவர்களுக்கு: இலங்கை 9 மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. 1987 இந்திய-இலங்கை ஒப்பந்தப்படி இலங்கையின் 13ஆம் அரசியலமைப்புச் சட்டத்திருத்தம் இந்த மாகாணங்களைக் கொண்டுவந்தது. இவற்றில் இரண்டு மாகாணங்கள் ஈழத்தில் இருக்கின்றன. கடந்த ஆண்டு கிழக்கு மாகாணத்திலிருந்து விடுதலைப் புலிகள் விரட்டியடிக்கப்பட்ட பின்பு முதல் முறையாக அங்கு தேர்தல் நடைபெற இருக்கிறது. ஈழமக்கள் கொடுத்து வைத்திருந்தால் வடக்கு மாகாணத்திலும் புலிகள் வேரறுக்கப்பட்டு அங்கும் தேர்தல் நடத்தும் நிலை வரலாம்.

Thursday, March 27, 2008

'பிரபாகரன்' வளர்க! பிரபாகரன் ஒழிக!



மேலுள்ள நிகழ்படத்தில் சிதறும் பெண் சீமானின் அல்லது சுப. வீரபாண்டியனின் சகோதிரியாக இருந்திருந்தால் அவர்கள் சமீபத்திய தீவிரவாத ஆதரவு ரவுடித்தனத்தில் இறங்கியிருப்பார்களா? எவனோ, எவளோ சாகிறான். சும்மா வேலையில்லாமல் இருப்பதால் சத்தம் போட்டுக்கொண்டிருக்கும் இந்த அல்லக்கைகளுக்கு சில உயிர்கள் காப்பாற்றப்படுவது பொறுக்கவில்லை.

விடுதலைப் புலிகளின் தற்கொலைப் படையினர் மூளைச்சலவை செய்யப்பட்டு தேவையில்லாமல் பலிகொடுக்கப்படுகிறார்கள் என்பது தெரிந்த விசயம்தான். பலியாடாகத் தேர்வு செய்யப்பட்டு பின் மனதை மாற்றிக்கொண்ட பின்பும், வெடித்துத்தான் ஆகவேண்டும் என்னும் புலிகளின் கொலைமுயற்சியிலிருந்து தப்பிவந்த சில தமிழரின் கதையை ஒரு சிங்களர் படமாக எடுத்திருக்கிறார். அந்த இயக்குனருக்கு சென்னையில் அடி, உதை! உண்மை வெளிவரக்கூடாது என்பதில் ஒரு செய்தியாளருக்கும், இன்னொரு கலைஞனின் படம் வெளியாகக்கூடாது என்பதில் ஒரு இயக்குனருக்கும் எவ்வளவு அக்கறை!

சமீபத்தில் ஈராக்கில் மனநலம் குன்றிய பெண்களின் உடம்பில் வெடிமருந்துகளை கட்டியனுப்பி தூரத்திலிருந்து வெடிக்கவைத்தார்கள். அவர்களுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் என்ன வித்தியாசம்? மேலுள்ள ஒளித்துண்டில்கூட அந்த பெண் தான் கொல்லவந்த மனிதர் அலுவலகத்தில் இல்லை என்று தெரிந்தும், சும்மா வந்துவிட்டோமே என்பதற்காக யாரோ ஒருவரைக் கொன்று தானும் சாகிறாள். இதுதான் சுதந்திர போராட்டமா?

ஆமாம் தெரியாமல்தான் கேட்கிறேன். சாக விரும்பாதவர்களை மூளைச்சலவை செய்து சாக அனுப்பும் புலிகள் கடைசியில் அந்த பலியாட்டை பிரபாகரனோடு எதற்கு சாப்பிட அனுப்புகிறார்கள்? கடந்த இருபது ஆண்டுகளில் சண்டையே போடாமல் ஒளிந்துகொண்டு, தின்று தின்று பன்றி போல உடம்பை வைத்திருக்கும் அந்த கோழையைப் போய்ப் பார்த்தால், அதுவும் அவன் தின்றுகொண்டிருக்கும்போது பார்த்தால் ஏற்றியிருக்கும் மூளைச்சலவை இறங்கிவிடாதா?

Saturday, March 15, 2008

சங்கே முழங்கு!



தர்மசாலாவில் இருந்து இயங்கும் திபெத் அரசு இங்கே. திபெத் நன்பர்களின் தளம் இங்கே.

Friday, March 14, 2008

தமிழகத்தில் புலிகள் நடமாட்டம் அதிகரிப்பு!

ம்... ஈழத்தமிழரை அழித்தொழிக்கும் அந்த கெட்ட புலிகள் அல்ல! தமிழகக் காடுகளில் உலவும் நல்ல புலிகளைத் தான் சொல்கிறேன். இந்தியாவின் புலிகள் எண்ணிக்கை ஐந்து ஆண்டுகளில் பாதியாகக் குறைந்து சுமார் 1400 புலிகள் மட்டுமே எஞ்சியிருப்பதாக சமிபத்தில் செய்தி வெளியாகியிருந்தது.

ஆனால் தமிழகத்தில் ஒரு வேளை புலிகளைக் காப்பற்றும் முயற்சிகள் வேலை செய்ய ஆரம்பித்திருக்கலாம். தமிழகத்தில் தற்போது சுமார் 65-86 புலிகள் மீதமிருப்பதாகத் தெரிகிறது. இது பெருமைப் பட்டுக்கொள்ள வேண்டிய செய்தியில்லை என்றாலும் இருந்த புலிகளும் அழிந்தன என்று செய்தி வராமல் இருப்பதே பெரிய விசயம்.

புலிகள் விசயத்தில் உங்களுக்கு ஆர்வமிருந்தால் இங்கேயும் வாங்க -> புலிகள் திட்டம், உலக வனவிலங்கு ஆணையத்தின் கையெழுத்து இயக்கம்.

அப்புறம், எவ்வளவு நாளைக்குத்தான் ஆர்க்கூட்டிலும், யூடூபிலும் பழியாய் கிடப்பீங்க. Connet2Earthத்துக்கும் வாங்க!

Monday, March 10, 2008

தமிழா இசையா?

கர்னாடக இசையில் தமிழ் புறக்கணிக்கப்படுகிறது என்று பல காலமாகவே குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. நான்கூட இது பற்றி இங்கே எழுதியிருக்கிறேன். இதற்கு எதிர்விவாதமாக ராம் சிறிராம் என்பவர் எழுதிய கட்டுரை இங்கே. தமிழில் பாடல்களே இல்லை என்னும் விதண்டாவாதத்தை விட இவரது கட்டுரை சற்று ஏற்றுக்கொள்ளக் கூடியதாய் இருக்கிறது.

முன்பைவிட இப்போது நிலைமை சற்று தேறிவருகிறது என்றுதான் நினைக்கிறேன். சென்னை சங்கமத்தில் கர்னாடக இசையும் இடம்பெற்றிருப்பது நல்லதே. அருணா சாய்ராம் போன்றவர்கள் பழந்தமிழ் பாடல்களை கச்சேரிகளில் பாடுகிறார்கள்.

கர்னாடக இசையும் தமிழரின் இசையே (?!) என்னும் நிலை வரவேண்டுமானால் கர்னாடக இசைக் கச்சேரிகளுக்கென்றே நிறைய புதிய தமிழ் பாடல்கள் எழுதப்படவேண்டும். திரைப்படங்களுக்கெல்லாம் எழுதும் கவிஞர்களால் கர்னாடக இசைக்கு எழுதமுடியாதா என்ன?

Tuesday, March 04, 2008

கிரிக்கெட் என்னும் அரக்கன்!

கிரிக்கெட் என்னும் விளையாட்டு இரண்டு வேலை உணவுக்கு வழியில்லாமல் வறுமையில் வாடும் கோடிக்கணக்கானோரின் முகத்தில் பூசப்படும் கரியாகி வருகிறதா? Cricinfo வில் வெளியாகியிருக்கும் இந்த கட்டுரை சிந்திக்கத் தக்கது.

ஆறு பந்தில் சிக்ஸர் அடித்ததற்காக யுவராஜ் சிங்கிற்கு ஒரு கோடி உரூபாய் கொடுத்தது. சும்மா ஒரு மூன்று நாடுகள் போட்டியில் நேற்று வென்றதற்கே பத்து கோடி உரூபாய் பரிசு அறிவித்திருப்பது. பத்து காசு கேட்டு குழந்தையுடன் பிச்சை எடுக்கும் சிறுமிகள் ஒவ்வொரு தெருவிலும் தென்படும் மும்பை நகரின் மற்றொரு பகுதியில் பல கோடி உருபாய்களுக்கு விளையாட்டு வீரர்கள் ஏலமிடப்படுவது, அது பெருமையாக ஊடகங்களில் தெரிவிக்கப்படுவது.

இந்தியாவில் கம்யூனிஸ்டுகள் யாராவது இன்னும் இருந்தால், இந்த capitalist கிரிக்கெட் போட்டிகளுக்கு எதிராக போராட்டம் நடத்தலாம். ஒரு சின்ன யோசனை. வருகிற ஏப்ரல் மே மாதங்களில் நடக்கவிருக்கும் IPL என்னும் அசிங்கத்தை புறக்கணிப்போம்! அதன் மூலம் நாம் சேமிக்கும் மின்சாரம், மைதான சீட்டு பணம், நமது நேரம் ஆகியவற்றுக்கு ஈடான ஒரு தொகையை, ஸ்டீவ் வாவ் பிரபலப்படுத்திய உதயன் முயற்சிக்கு நன்கொடையாக வழங்குவோம்.

இந்து சமவெளியினர் திராவிடரா?

ஆ! சும்மா கவணத்தை கவர்வத்றகாக வைத்த தலைப்புதான்! ஃபின்லாந்து நாட்டு இந்திய ஆய்வாளர் (Indologist) அஸ்கோ பார்போலாவின் பேட்டி இந்து நாளிதழில் வந்திருக்கிறது. இங்கே.

இந்து சமவெளி எழுத்துகள் ஒரு திராவிட மொழியை எழுதப் பயன்பட்டிருக்கலாம் என்றும், தமிழகத்தில் ஜைமினி சாம வேதம் காப்பாற்றப்படுவது குறித்தும், தமிழக பழங்குடியின மக்களின் மொழி, வாழ்க்கைமுறை ஆகியவற்றை பதிவு செய்து, அதிலிருந்து இந்தியாவின் மிகத்தொன்மையான வரலாற்றை அறிய முயலவேண்டுமென்றும் பேராசிரியர் பார்போலோ தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Thursday, February 28, 2008

கற்றதும் பெற்றதும் ஏராளம்!

எழுத்தாளர் சுஜாதா ரங்கராஜன் காலமானார். வருத்தப் படவைக்கும் செய்தி. அவர் மிகவும் விரும்பிய அரங்கனின் பாதங்களை சேர்ந்திருப்பார் என்று நம்பலாம்.

என்னைப் போன்ற அல்லக்கைகளின் தமிழை சுஜாதா எவ்வளவு தூரம் செதுக்கியிருக்கிறார் என்பது வியக்கவைக்கும் ரகசியம். பல வருடங்களாக அவரின் எழுத்துகளை விகடனில் படித்துவருகிறேன். அவரது எழுத்து அறிமுகமாகும் முன்பே 'கொலையுதிர் காலம்', 'என் இனிய இயந்திரா' என்று தொலைக்காட்சி வழியாக அவரின் விசிறியாகிவிட்டேன். அவரது குறிப்புகளை வைத்து நான்கூட ஹைக்கூ எழுதலாமா என்று நப்பாசைப் பட்டதுண்டு!

சுஜாதாவின் நாவல்கள் அனைத்தையுமே படித்த நன்பன் ஒருத்தனை எனக்குத் தெரியும். விகடனில் வந்தவை தவிர்த்து நான் ஒரேயொரு நாவலை புத்தகமாகப் படித்திருக்கிறேன். சிப்பாய்க் கலகம் பற்றிய கதை. பெயர் நினைவில்லை. எனக்கு காகித ஓட்டே போடாத மின்னனு வாக்காளன் என்னும் பெருமையை (?) வாங்கித்தந்ததிலும் அவருக்கு பங்கிருக்கிறது. அம்பலத்துக்கும் அவ்வப்போது நான் போவதுண்டு.

அவரின் திரைப்பட பங்களிப்புகள் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பினும், 'கணேஷ் வசந்த்' மற்றும் 'சீரங்கத்து தேவதைகளை' அவர் இருக்கும்போது படமாக்கியிருந்தால் இன்னும் சிறப்பாகயிருந்திருக்கும்.
ழ கணினி முயற்சியும் கொஞ்சம் டல்லடிக்கிறது. யாரேனும் இந்த இரண்டையும் செய்து முடிக்கலாம். சென்னையில் நிகழ்கலைகளுக்கு (performing arts) பிரத்யேக அரங்கம் வேண்டும் என்று அவர் கேட்டது சிங்கப்பூர் Esplanade இல் நின்றபோது சரியென்று பட்டது.

கற்றதும் பெற்றதும் படிப்பதற்காகவே விகடன் சந்தா வைத்திருந்தேன். ஒரு பிறந்தநாள் பற்றிய அத்தியாயத்தில் "காலாற நடந்துசென்று திருவல்லிக்கேணியில் எனது குடும்ப வீட்டை பார்த்தேன்" என்று அவர் எழுதியது என்னை நெகிழவைத்தது நினைவிருக்கிறது. கடைசி அத்தியாயத்தில் இளைஞர்களை இந்திய ஆட்சிப் பணியில் சேர்ந்து நாட்டுக்கு உழைக்கச் சொன்னார்!

பல வழிகளிலும் அவரிடமிருந்து நான் கற்றதும் பெற்றதும் ஏராளம். அதை வைத்தே இன்னும் பல காலத்துக்கு நான் ஜல்லியடிக்கமுடியம்! நன்றி.

மேலும்: எழுத்தாளர் சுஜாதா, சுஜாதாலஜி.

Tuesday, February 26, 2008

கலக்கியது திரிபுரா!

திரிபுரா மாநிலத்தில் சனிக்கிழமை நடந்து முடிந்த தேர்தலில் 92 சதவீதம் வாக்காளர்கள் வாக்களித்து கலக்கியிருக்கிறார்கள். இது பற்றிய பத்திரிக்கை செய்தி இங்கே. திரிபுரா செய்தித்தளம் ஒன்று் இங்கே. இந்தியாவில் கம்யூனிஸ்டுகள் ஆட்சி செய்யும் மூன்று மாநிலங்களில் திரிபுராவும் ஒன்று என்பது நீங்கள் அறிந்ததே. மாணிக் சர்க்கார் ஆட்சி தப்புமா என்று மார்ச் 8 அன்று தெரியும்!

Monday, February 25, 2008

குப்பை படத்துக்கு ஆஸ்கரா?

நேற்றிரவு The Counterfeiters என்னும் ஆஸ்திரிய நாட்டுப் படம் பார்த்தேன். படு கேவலம். அதற்கு இன்று ஆஸ்கர் விருது கிடைத்திருக்கிறது. கொடுமைடா சாமி!

படு கேவலம்னா பி.வாசு படம் அளவுக்குக் கேவலம். சும்மா holocaust பற்றி தலைப்பு வச்சுட்டு ஒரு கருப்பு திரையைக் காட்டினாகூட ஆஸ்கர் கொடுத்திடுவாங்க போலயிருக்கு. Manufactured Emotions கொண்ட ் அழுகாச்சிப் படம். அதைக்கூட ஒழுங்கா எடுக்கத்தெரியல.

ஆஸ்விட்சு மூகாமிலிருக்கும் யூத நாயகன் எவ்வளவோ சிரமத்துக்கு அப்புறம் மருந்து வாங்கிட்டு வருவாரு, ஆனா இழுத்துகிட்டு இருந்தவரு, நாயகன் வருகிற நேரத்துல சாவாரு. வில்லன் நாயகன் மேலே சிறுநீர் கழிப்பாரு. ஒருத்தரு மணிக்கட்டில வெட்டிக்கிட்டு சாவாரு. நாசிக்கள் தோற்று ஓடினப்புறம் முகாம்வாசிகள் ஒரு நல்ல படுக்கையைப் பார்த்து கண்ணீர் வடிப்பாங்க. இந்த மாதிரியான, ஒரு பதினையாயிரம் படங்களில் பார்த்த காமெடி காட்சிகளை வைத்து ஆஸ்கர் வாங்கிட்டாங்க. அசிங்கம்.

இந்த படத்துக்கு விருதாம். ஆனா திரைப்பட வரலாற்றின் மிகச்சிறந்த படங்களில் ஒன்றான 4,3,2 க்கு nomination கூட கிடையாதாம்! அரசியல் காரணங்களுக்காக 4,3,2 சேர்க்கப் படவில்லை என்பது தெரிந்ததுதான். (கருக்கலைப்பு பற்றிய படம் குடியரசுக் கட்சிக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தும்.) இது ஒரு மோசடின்னு சில விமர்சகர்கள் கூட எழுதியிருக்காங்க. ஆனா 4,3,2 வந்த ஆண்டில் ஒரு கேவலமான படத்துக்கு விருது கிடைத்தது பெரும் அவமானம்.