Thursday, February 28, 2008

கற்றதும் பெற்றதும் ஏராளம்!

எழுத்தாளர் சுஜாதா ரங்கராஜன் காலமானார். வருத்தப் படவைக்கும் செய்தி. அவர் மிகவும் விரும்பிய அரங்கனின் பாதங்களை சேர்ந்திருப்பார் என்று நம்பலாம்.

என்னைப் போன்ற அல்லக்கைகளின் தமிழை சுஜாதா எவ்வளவு தூரம் செதுக்கியிருக்கிறார் என்பது வியக்கவைக்கும் ரகசியம். பல வருடங்களாக அவரின் எழுத்துகளை விகடனில் படித்துவருகிறேன். அவரது எழுத்து அறிமுகமாகும் முன்பே 'கொலையுதிர் காலம்', 'என் இனிய இயந்திரா' என்று தொலைக்காட்சி வழியாக அவரின் விசிறியாகிவிட்டேன். அவரது குறிப்புகளை வைத்து நான்கூட ஹைக்கூ எழுதலாமா என்று நப்பாசைப் பட்டதுண்டு!

சுஜாதாவின் நாவல்கள் அனைத்தையுமே படித்த நன்பன் ஒருத்தனை எனக்குத் தெரியும். விகடனில் வந்தவை தவிர்த்து நான் ஒரேயொரு நாவலை புத்தகமாகப் படித்திருக்கிறேன். சிப்பாய்க் கலகம் பற்றிய கதை. பெயர் நினைவில்லை. எனக்கு காகித ஓட்டே போடாத மின்னனு வாக்காளன் என்னும் பெருமையை (?) வாங்கித்தந்ததிலும் அவருக்கு பங்கிருக்கிறது. அம்பலத்துக்கும் அவ்வப்போது நான் போவதுண்டு.

அவரின் திரைப்பட பங்களிப்புகள் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பினும், 'கணேஷ் வசந்த்' மற்றும் 'சீரங்கத்து தேவதைகளை' அவர் இருக்கும்போது படமாக்கியிருந்தால் இன்னும் சிறப்பாகயிருந்திருக்கும்.
ழ கணினி முயற்சியும் கொஞ்சம் டல்லடிக்கிறது. யாரேனும் இந்த இரண்டையும் செய்து முடிக்கலாம். சென்னையில் நிகழ்கலைகளுக்கு (performing arts) பிரத்யேக அரங்கம் வேண்டும் என்று அவர் கேட்டது சிங்கப்பூர் Esplanade இல் நின்றபோது சரியென்று பட்டது.

கற்றதும் பெற்றதும் படிப்பதற்காகவே விகடன் சந்தா வைத்திருந்தேன். ஒரு பிறந்தநாள் பற்றிய அத்தியாயத்தில் "காலாற நடந்துசென்று திருவல்லிக்கேணியில் எனது குடும்ப வீட்டை பார்த்தேன்" என்று அவர் எழுதியது என்னை நெகிழவைத்தது நினைவிருக்கிறது. கடைசி அத்தியாயத்தில் இளைஞர்களை இந்திய ஆட்சிப் பணியில் சேர்ந்து நாட்டுக்கு உழைக்கச் சொன்னார்!

பல வழிகளிலும் அவரிடமிருந்து நான் கற்றதும் பெற்றதும் ஏராளம். அதை வைத்தே இன்னும் பல காலத்துக்கு நான் ஜல்லியடிக்கமுடியம்! நன்றி.

மேலும்: எழுத்தாளர் சுஜாதா, சுஜாதாலஜி.

Tuesday, February 26, 2008

கலக்கியது திரிபுரா!

திரிபுரா மாநிலத்தில் சனிக்கிழமை நடந்து முடிந்த தேர்தலில் 92 சதவீதம் வாக்காளர்கள் வாக்களித்து கலக்கியிருக்கிறார்கள். இது பற்றிய பத்திரிக்கை செய்தி இங்கே. திரிபுரா செய்தித்தளம் ஒன்று் இங்கே. இந்தியாவில் கம்யூனிஸ்டுகள் ஆட்சி செய்யும் மூன்று மாநிலங்களில் திரிபுராவும் ஒன்று என்பது நீங்கள் அறிந்ததே. மாணிக் சர்க்கார் ஆட்சி தப்புமா என்று மார்ச் 8 அன்று தெரியும்!

Monday, February 25, 2008

குப்பை படத்துக்கு ஆஸ்கரா?

நேற்றிரவு The Counterfeiters என்னும் ஆஸ்திரிய நாட்டுப் படம் பார்த்தேன். படு கேவலம். அதற்கு இன்று ஆஸ்கர் விருது கிடைத்திருக்கிறது. கொடுமைடா சாமி!

படு கேவலம்னா பி.வாசு படம் அளவுக்குக் கேவலம். சும்மா holocaust பற்றி தலைப்பு வச்சுட்டு ஒரு கருப்பு திரையைக் காட்டினாகூட ஆஸ்கர் கொடுத்திடுவாங்க போலயிருக்கு. Manufactured Emotions கொண்ட ் அழுகாச்சிப் படம். அதைக்கூட ஒழுங்கா எடுக்கத்தெரியல.

ஆஸ்விட்சு மூகாமிலிருக்கும் யூத நாயகன் எவ்வளவோ சிரமத்துக்கு அப்புறம் மருந்து வாங்கிட்டு வருவாரு, ஆனா இழுத்துகிட்டு இருந்தவரு, நாயகன் வருகிற நேரத்துல சாவாரு. வில்லன் நாயகன் மேலே சிறுநீர் கழிப்பாரு. ஒருத்தரு மணிக்கட்டில வெட்டிக்கிட்டு சாவாரு. நாசிக்கள் தோற்று ஓடினப்புறம் முகாம்வாசிகள் ஒரு நல்ல படுக்கையைப் பார்த்து கண்ணீர் வடிப்பாங்க. இந்த மாதிரியான, ஒரு பதினையாயிரம் படங்களில் பார்த்த காமெடி காட்சிகளை வைத்து ஆஸ்கர் வாங்கிட்டாங்க. அசிங்கம்.

இந்த படத்துக்கு விருதாம். ஆனா திரைப்பட வரலாற்றின் மிகச்சிறந்த படங்களில் ஒன்றான 4,3,2 க்கு nomination கூட கிடையாதாம்! அரசியல் காரணங்களுக்காக 4,3,2 சேர்க்கப் படவில்லை என்பது தெரிந்ததுதான். (கருக்கலைப்பு பற்றிய படம் குடியரசுக் கட்சிக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தும்.) இது ஒரு மோசடின்னு சில விமர்சகர்கள் கூட எழுதியிருக்காங்க. ஆனா 4,3,2 வந்த ஆண்டில் ஒரு கேவலமான படத்துக்கு விருது கிடைத்தது பெரும் அவமானம்.

Thursday, February 21, 2008

இப்படிக்கு ரோஸ்!

"இந்தியத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக ..." என்னும் எரிச்சலூட்டும் விளம்பரம் இந்த முறை உண்மையாக இருக்கலாம். விஜய் தொலைக்காட்சியில் ஒரு திருநங்கை நடத்தும் 'இப்படிக்கு ரோஸ்' என்னும் நிகழ்ச்சி வரப்போகிறதாம். பாராட்டுகள்!

Monday, February 11, 2008

4 மாதங்கள், 3 வாரங்கள், 2 நாட்கள்

பயம்... நடுக்கம்... திரையரங்கிலிருந்து எழுந்து ஓடிவிடலாமா என்ற எண்ணம்.

4 மாதங்கள், 3 வாரங்கள், 2 நாட்கள். (ரோமானிய மொழி) இந்தப் படத்தைப் பார்த்து நடுங்காதவன் ஆண்மகனேயில்லை. ஆமாம்! ஏனென்றால் பெண்கள், குறிப்பாக அம்மாக்கள் இந்தப் படத்தை நடுங்காமல் பார்ப்பார்களாயிருக்கும். ஆண்களால் முடியுமாயென்று தெரியவில்லை. என்னால் முடியவில்லை.

நான் பார்த்த படங்களிலேயே தாங்க முடியாத படங்களென நான் கருதுவது Cries and Whispers மற்றும் The Return. முதலாவது பர்க்மனின் தேவையில்லாத (ஆனால் புகழ்பெற்ற) சித்தரவதை. இரண்டாவதை எடுத்து குலை நடுங்க வைத்தவர் அடுத்து படமெடுக்கலாமா என்று இன்னும் யோசித்துக் கொண்டிருக்கிறார்!

சரி 4,3,2. இதோட கதை பற்றியெல்லாம் நான் சொல்ல விரும்பவில்லை. நிச்சயம் பாருங்கள். பெண்களுடன் சேர்ந்து பார்ப்பது நமக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தும். இது பெண்களைப் பற்றி ஒரு ஆண் இயக்குனர் (Cristian Mungiu) ஆண்களுக்காக எடுத்த படம்... பாடம்.

ஹாயல்லாஹ்!!



ஆஹா, நதீன் லபாக்கியை எப்படிய்யா இத்தனை நாளா எங்ககிட்டேர்ந்து மறச்சீங்க? லெபனான் பெண்களும் இத்தாலிய ஆண்களும் இருப்பதிலேயே அழகானவர்கள் என்று சில வேலையத்த ஆராய்ச்சிகள் தெரிவிப்பது வழக்கமே. அதுக்காக இப்படியா? ஆயிரக் கணக்கான வருடங்களின் வரலாறு தாங்கி. பல மதங்களைத் தழுவி, அரபிக், பிரஞ்சு என்று கொஞ்சி, மேற்கும் கிழக்கும் கலந்தடிக்கும் பெண்களுக்கு 'அழகிகள்' என்னும் பட்டம் மிகவும் சாதாரணமாகப் படுகிறது!

ம்... நான் நேற்று பார்த்த Caramel இன் மயக்கத்திலிருந்து இன்னும் விடுபடவில்லை போலிருக்கிறது!

Saturday, February 09, 2008

சென்னையில் பிரஞ்சுத் திரைப்பட விழா

சென்னை சத்யம் திரையரங்கில் Alliance Francaise ஆதரவுடன் நடைபெறும் பிரஞ்சுத் திரைப்பட விழா துவங்கியிருக்கிறது. இது பற்றிய செய்தி இங்கே.

நீங்கள் சென்னையில் இருந்தும் Caramel (Sukkar banat) உள்ளிட்ட படங்களில் எதையாவது ஒன்றையேனும் பார்க்க உங்களுக்கு ஆர்வமும் நேரமும் இல்லையென்றால், உங்கள் வாழ்க்கை 'கோவிந்தா' ஆகிக்கொண்டிருக்கிறது என்று நீங்கள் புரிந்துகொள்ளலாம்! ஆ!!!

சரி அப்படியே, போன வாரம் நான் பார்த்த படங்களின் சிறு விமர்சனங்கள் கீழே.

Mar adentro
(Sea Inside) - மனிதாபிமானக் கொலை (Euthanasia) பற்றிய ஸ்பானியப் படம். பார்க்கலாம்.

Argent de poche, L'
(Small Change or Pocket Money) - சுட்டிகளின் லூட்டி! பார்க்கலாம். சொர்கத்தின் குழந்தைகள், நாய் பிழைப்பு போன்ற படங்களை ரசித்தவர்கள் இதையும் ரசிப்பார்கள்.

Domicile Conjugal (Bed and Board) - Francois Truffat எடுத்த பிரஞ்சு new wave படங்களில் ஒன்று. Antoine Doinel என்ற புனை பாத்திரம் வரும் ஐந்து படங்களில் நான்காவது. Claude Jade இன் கொள்ளை அழகுக்காகப் பார்க்கலாம்!

Thursday, February 07, 2008

அகிம்சை பட்டு

பட்டுப் புடவைகள்/வேட்டிகள் எவ்வளவு கொடூரமானவை என்று என்னுடைய இந்த ஆங்கில இடுகையில் எழுதியிருந்தேன். ஒரு பட்டுப்புடவை தயாரிக்க சுமார் 1500 பட்டுப் புழுக்கள் கொதிக்கின்ற வெந்நீரில் வேகவைக்கப்படும் அநியாயத்தை என்னவென்று சொல்வது? கடவுள் சிலைகளும் கன்னிப் பெண்களும் பட்டுத்துணி உடுத்தி வந்தால், ரசிப்பதா?! வெறுப்பதா?

இந்தக் கொடூரத்துக்கு சிறந்த மாற்று, பட்டுத் துணிகளையே அணியாமல் இருப்பதுதான்! மாற்றுத் துணிக்கே வழியில்லாமல் கஷ்டப்படும் மக்களிருக்க பட்டு என்னும் ஆடம்பரம் எதற்கு? அப்படியே அணிந்துதான் ஆகவேண்டுமென்றால் 'அகிம்சை பட்டு' என்னும் துணிகளை அணியலாம். பட்டுப் புழுக்கள் தாமே துறக்கும் கூடுகளிலிருந்து இந்தப் பட்டுத்துணிகள் தயாரிக்கப் படுகின்றனவாம்.

இது பற்றி டைம்ஸ் ஆப் இந்தியாவில் வந்த செய்தி இங்கே. சென்னை பூம்புகார் அங்காடியில் அகிம்சை பட்டு விற்கப்படுவது குறித்து போன வருடம் வந்த இந்து நாளிதழ் செய்தி இங்கே.