'ஒட்டு தாடி வெளிப்படையாய் தெரிய ஒருவர் நடித்த படத்தை மக்கள் காசு கொடுத்து பார்க்கவேண்டும்' என்னும் ஆணவத்தை ஏற்க மனமில்லாமல் 'கற்றது தமிழ்' என்ற படத்தைப் பார்க்காமல் தவிர்த்து வந்தேன். இன்று ஒரு தொலைக்காட்சி அலைவரிசையில் பார்க்க நேர்ந்தது. இந்த படுசுமாரான படத்தை பற்றி என்னிடம் சிலாகித்தவர்களை நினைத்து சிரித்தேன்.
ஒரு திரைப்படத்தை எப்படி மதிப்பிடுவது என்பது பலருக்கும் புரிவதில்லை. கதை, கருத்து அகியவையெல்லாம் ஒரு படத்தை மதிப்பிடுவதில் எந்த பங்கும் வகிக்கக்கூடாது. (ம் ... கதையே இல்லாமல் படமெடுப்பதை கண்டிப்பது வேறு விசயம்!)
கொடுத்த கதையை எவ்வாறு எடுத்திருக்கிறார்கள், ஒளி, ஒலிப்பதிவு எப்படியிருக்கிறது, திரைக்கதை தெருக்கூத்துத் தனமாக இருக்கிறதா, நடிகர்கள் தேமேயென்று வந்துபோகிறார்களா, ஒப்பனை தேவைப்பட்டால் அது எவ்வளவு அசிங்கமாகயிருக்கிறது? என்று எதையுமே கருத்தில் எடுத்துக்கொள்ளாமல் ஒரு படத்தை புகழ்வது எரிச்சலை ஏற்படுத்துகிறது!
மேலே நான் கொடுத்த எந்த தராதரத்திலும் 'கற்றது தமிழ்' நூற்றுக்கு பத்து மதிப்பெண்களைக்கூடப் பெறாது. மற்றபடி எதோ தமிழ் பற்றிய கதை என்றால் அதுவும் நகைப்புக்குரியது. ஒரு நூறு படங்களில் பார்த்துப் புளித்துப்போன தனிமனிதனின் துன்பங்களுக்காக சமூகத்தைப் பழிவாங்கும் மசாலாக் கதையில், தமிழ் என்ற மையை லேசாக (தேவையேயில்லாமல்) தடவி மக்களை முட்டாளாக்கியிருக்கிறார்கள். அவ்வளவுதான்.
நிற்க. படமெடுப்பவர்கள் கஷ்டப்பட்டு எடுத்திருக்கிறார்களே, படத்தை விமர்சிக்க நமக்கு என்ன தகுதியிருக்கிறது என்பதெல்லாம் தேவையில்லாத கவலைகள். ஆரோக்கியமான விமர்சனமே கலைஞர்களிடமிருந்து சிறந்த படைப்புகளை வரவைக்கும்!
***
பெர்க்மன் நினைவு திரைப்பட வரிசையில் இன்று 'வின்டர் லைட்' என்ற படத்தை பார்த்தேன். எப்போதும் போல ஆழமான படம். கடவுள் நம்பிக்கை போலித்தனமான சுயநலவாதம் என்கிறார் பெர்க்மன். ஆமேன்!