மலேசியத் தமிழர்கள் இனரீதியிலான இடஒதுக்கீடு, பொருளாதாரப் பங்கீட்டுக் கொள்கைகளால் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள் என்ற விசயமே எனக்கு இப்போதுதான் தெரிந்தது. அதற்காக வருந்துகிறேன். அவர்களின் அறப்போராட்டம் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள். அவர்கள் சில கிறுக்கத்தனமான கோரிக்கைகளைக் கைவிடுவது அவர்களின் போராட்டத்திற்கு மேலும் வலுசேர்க்கும்.
நிற்க. பெரும்பான்மை மக்கள் காலம் கடந்து இடஒதுக்கீடு பெறுவது எப்படி தவறாக முடியும் என்பதை மலேசிய நிலைமை எடுத்துரைக்கிறது. பிற்காலத்தில் தமிழகத்திலும் இந்த மாதிரி நிலைமை வரலாம். இன்றைய நிலையில் தமிழக சாதிவாரி ஒதுக்கீட்டு அளவு நியாயமாகத்தான் இருக்கிறதென்று நினைக்கிறேன். ஆனால் தமிழரின் பொருளாதார நிலை மேம்படும்போது சிலர் தேவையில்லாமல் தண்டிக்கப்படும் நிலை ஏற்படலாம்.
இடஒதுக்கீடு மூலம் சமூக நீதியை நிலைநாட்டும் முயற்சியில் முன்னோடியாகத் திகழும் தமிழகம், சாதிவாரி இடஒதுக்கீடு இனி தேவையில்லை என்று நிர்ணயிக்கும் முடிவை சரியான தருணத்தில் எடுக்கும் என்று நம்புகிறேன். முதல் காரியமாக தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களில் தேவையானவர்களுக்கு பயன்கள் போய்ச் சேருகிறதா, இல்லை அவர்கள் இடுக்கில் விழுந்துவிட்டார்களா என்று அறிய முயற்சிகள் எடுக்கவேண்டும்.
No comments:
Post a Comment